காதலும் கனவா? - புவனேஸ்வரி
எண்ணங்களுடன் எதிர்நீச்சல் போட இயலாமல்
கண்களை அழுந்த மூடினேன்
எங்கோ தூறும் வான்மழையிலிருந்து
நொடி பொழுதில் ஒரு மின்னல்
என் மூடிய விழிகளுக்குள் விருந்தாக
உன் பூமுகத்தை முன் நிறுத்தி சென்றது !
என்ன ஓர் அதிசயம் ?
புயலில் துவண்டு விழுந்த பூப்போல்இருந்த
என்னையும் புன்னகைக்க வைத்துவிட்டாயே !
எப்படி எனக்குள் வந்தாய் ?
எப்படி என்னை உனக்குள் புகுத்தினாய் ?
விழிதிறவாமல் பின்னோக்கி சென்றேன்
நீ வந்த வசந்த காலத்தை நினைவில் நிறுத்த !!
அதற்குள் வெட்கத்தில் சிணுங்கியது என் கைப்பேசி !
அதிலும் உன் குரலே பாடலாய் ஒலித்தது !
அன்றொருநாள் என் கண்களுக்குள் ஊடுருவி
நீ பாடிக்கொண்டிருந்தபோது
உனக்கே தெரியாமல் பதிவு செய்தேன்
அவ்வளவு இனிய பாடகனா நீ?
எத்தனை ஆழமான காதல் இழையோடியது உன் குரலில் ?
அதை ரசித்தவண்ணம் கைபேசிக்கு உயிர் கொடுத்தேன்
மாலை உன் தரிசனம் தருவதாய்
சொல்லி கடற்கரையில் காத்திருந்தாய் !!
தொலைவிலிருந்தே உன்னை என் பார்வையால் சிறைப்பிடித்தேன்!
உன்மடியில் முகம் புதைத்து
என் துன்பத்தை சொல்லி அழுது ஆறுதல் பெற வேண்டும் என்ற தவிப்பும்
உன்னை நொடி பொழுதும் விலகாமல்
உன் நிழலில் கூட என் காதலை நிரப்பிவிட வேண்டும் என்ற துடிப்பும்
குழந்தையா அல்லது குமரியா என சந்தேகிக்க வைத்தது !!
கரம் நீட்டவில்லை ; வா என்ற வாய்மொழியில்லை ;
கண் அசைவில் என்னை வரவேற்றாய்!
உன்முன்னே மண்டியிட்டு சரணடைந்தேன்
ஏதேதோ பேசினாய்!
செவி செயலற்றது கண்களுக்கு பார்வை கூடியது !
உன்முகத்தை கண் சிமிட்டாது ரசித்து சித்திரம் வடித்தேன் !
காற்றுக்கே சவால் விடுவதுபோல்
கட்டுக்கடங்காமல் போக்கு காட்டும் உன் சுருள் கேசம்
அதனை என் கைகளால் என்று கோதிடுவேனோ?
அலட்சியமும் ஆழமும் கூர்மையும் குறும்பும்
கடமையும் காதலும் ததும்பிடும் உன் பார்வை
அடித்தாலும் அணைத்தாலும் உன்னவன் நானே
என சொல்லாமல் சொல்லின !
இருவிழிகளின் நடுவே ஒரு அழகிய பாதை
என் பார்வையை உன் கூர் நாசிக்கு அழைத்து சென்றது
என்றுதான் என் கூந்தலின் மணம் நீ நுகர்ந்திடுவாயோ?
என்றெண்ணி நான் விட்ட ஏக்க பெருமூச்சு
நான் சூடியிருந்த மல்லிகையையும் வாட வைத்தது !
என்ன நினைத்தாயோ ?
என் ஏக்கத்தை உணர்ந்தாயோ ?
ஏதும் பேசாமல் என் விரல்களை சிறைபிடித்தாய்
காதல் எனும் பேரலையில் அடித்து செல்லப்பட்டதுபோல்
விழிகள் மூடி உன் தோள் வளைவில் முகம் புதைத்தேன்
இந்த மோனநிலையை அடையத்தான் பெண்ணாய் பிறந்தேனோ?
என் சிறு அசைவும் நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திடுமோ
என்றஞ்சி இதயத்திற்கும் தெரியாமல் மென்மையாய் சுவாசித்தேன் !
நம் கைபேசி நிரந்தர ஊமையாகிவிட வேண்டுமென
இறைவனிடம் இறைஞ்சினேன்
என்னை விலகவே மாட்டேன் என்பதைபோல்
என் விரல்களை நீ இறுகப்பற்றினாய்!!
சில நிமிடமா? சில மணி நேரமா?
சில நொடியா ? அந்த ரம்யநிலை ,
உன்னையும் என்னையும் அடித்து சென்ற
அந்த காதல் அலைக்குமே இது புரியாத புதிரல்லவா?
செவியருகில் மென்மையாய் ஒரு பெண்குரல்
"அண்ணி கொஞ்சாமாவது சாப்டுங்களேன் "
மருண்ட விழிகளுடன் கண்முன்னே நின்றாள்
அவள் உன் சகோதரி தான் !
மெல்ல புன்னகைக்க முயற்சித்து தோற்றாலும்
அதை வெளிபடுதாமல்
என் அருகில் உன்னை தேடினேன் !
நீயும் புன்னகைத்தாய் பூமாலையின் நடுவில் புகைப்படமாக !!
அன்பு நண்பர்களே, இந்த கவிதை நான் எழுதவில்லை. அதாவது இப்போ உங்க பார்வையில் இருக்கின்ற நான் எழுதவில்லை. கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு,உணர்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து எழுதுகோள் பிடித்தவளாய் எனக்குள் இருக்கும் அந்த 17 வயது சின்னப்பெண் எழுதிய கவிதை இது. நீண்ட நாட்களுக்கு பிறகு வாசித்து பார்க்கும்போது என்னையும் மீறி புன்னகைத்துவிட்டேன். அதே புன்னகையுடன் இக்கவியை உங்கள் பார்வையின் முன்வைக்கிறேன். அன்றைய நினைவுகள் அப்படியே இருக்கவேண்டும் என்பதற்காக எந்த வார்த்தைகளையும் மாற்றி எழுதவில்லை .அதனால் ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்
{kunena_discuss:779}