(Reading time: 2 - 3 minutes)

நிழலாய் தொடர்வோம் - புவனேஸ்வரி 

Heart

வாழ்க்கையெனும் பயணத்தில்,

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை!

 

இதைத்தான் உணர்த்துகின்றதோ

நமது வெவ்வேறான ரேகைகள்?

 

இதை நன்கு புரிந்துள்ளேன்..

எனினும் என் பார்வையோ

உன் பாதையிலேயே

நிரந்தரமாக நிறுத்தி நின்று கொண்டிருக்கிறது. !

 

உன் பாதையில்,

சாலை சீரானதா?

ஆபத்து அதிகமா?

பள்ளங்கள் உண்டா?

வழுக்கி விழுந்திடுவாயா என

கணக்கில்லா அச்சங்கள்!

 

நிராபராதிக்கு அளித்த மரண தண்டனை போல

மயிரிழையில் உயிர் தப்ப வேண்டியவனை கொன்றது போல

நீ துவண்டு விழுந்து அதை மறைக்கும் போதெல்லாம்

நான் நடுங்கி போகிறேன்!

 

கொண்டாட படவேண்டிய இன்னுயிர் நீ,

உனக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்காக இடுக்கண்?

ஒவ்வொரு பிரச்சினையின் போதும்

இறுகி போய் நீ இமயத்தில் அமர்கிறாய்

நான் உனை தேடி தவழ்ந்து வருகிறேன்.!

 

உன் நெற்றியில் வகிட்டில் முத்தமிட எண்ணவில்லை

மாறாக, காயங்களில் நொந்து போன பாதத்திற்கு

மருந்திட வாய்ப்பு கேட்கிறேன்

ஆனால், என் வரவும் உனக்கு சுமையாகி விடுகிறதே

ஆதலால் தான் இந்த தவிப்பு..!

 

நீ குழந்தையாய் இருந்திருந்தால்

என் மார்போடு அணைத்து காத்திருப்பேன், அல்லது

நீ முதுமை எய்தி இருந்திருந்தால்

சமூக சேவை என்ற சாக்கு சொல்லி உடனிருந்திருப்பேன்

போராடும் வயது உனக்கு,

எதை சொல்லி உன்னை இளைப்பாற விடுவேன்..?

 

சொந்தம் ஆகிட அவசியம் இல்லை

பந்தம் ஆகிட தேவையும் இல்லை

என அறிவு உதிர்த்த வார்த்தைகளை

பாழாய் போன உள்ளம் காலம் கடந்து கண்டிக்கிறது!

 

படையே இல்லாமல் போருக்கு புறப்பட்ட

வீரனை போல

உரிமை இல்லாமல் போனாலும்

உன்னை நிழலாய் தொடர்வோம்

நானும் என் மனமும் !

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.