பெண்ணே... - தங்கமணி சுவாமினாதன்
மாதராய்ப் பிறக்க"மாதவம் செய்திடல்"வேண்டும்...
மகா கவி பாடினான் அன்று..
அவனே இன்று உயிரோடிருந்தால்....
இப்படித்தான் பாடியிருப்பானோ?
மாதராய்ப் பிறக்க "மாபாபம்"செய்திருக்க வேண்டும் என்று
நாட்டுக்குச் சுதந்திரம் நள்ளிரவில் கிடைத்தது....
ஆனால் பெண்களுக்குமட்டும் இன்னும் விடியவே இல்லை..
பெண்களுக்கீங்கு பாதுகாப்பில்லை..
இரண்டு வயதிலும் பாலியல் தொல்லை..
எண்பது வயதிலும் நேர்ந்திடும் போது..பெண்கள் படும்-
பாட்டிற்கு எல்லையே இல்லை...
வீட்டிலும் தொல்லை,வெளியிலும் தொல்லை..
எங்கே சென்றாலும் ஆங்காங்கே தொல்லை..
மதுவும் மாதுவும் போகப் பொருட்கள் அவற்றை
அளவோடு பயன்படுத்த ஆண்களுக்கு அறிவுரை..
இது புதிதாய் வந்த படத்தின் பாடல்..
பெண்களே நாமென்ன போகப்பொருளா?
நாம் ஏன் சிந்திக்கவில்லை சினம் கொள்ளவில்லை?
பெண்ணொருத்திப் பிறக்கும் போதே அடிமையாய்த்தான்-
பிறக்கிறாள்..
பிறந்தவுடன் தந்தைக்கு அடிமை..கொஞ்சம் வளர்ந்தவுடன்
அண்ணனுக்கடிமை..திருமணமானதும் கணவனுக்கடிமை
பிள்ளையைப் பெற்றதும் அவனுக்கடிமை...
நாடு சுதந்திரம் பெற்றுவிட்டது நமக்கென்று சுதந்திரம்?
முண்டாசுக்காரா ..நீ மீண்டும் வந்து பிறக்க மாட்டாயா?
பெண்களுக்குச் சுதந்திரம் பெற்றுத்தர மாட்டாயா?