ஏழு வயதும் - எட்டாத ஆசைகளும்.... - தங்கமணி சுவாமினாதன்
சிப்பிக்குள் முத்தைபோல் என் நெஞ்சுக்குள் பல ஆசை..
என் வயதொத்த தோழியர் போல் சீருடை நானணிந்து
சின்னதாய் ட்டை கட்டிக் காலிரண்டில் ஷூவணிந்து...
டக்..டக்கென நடை நடந்து பள்ளி செல்ல ஓர் ஆசை..
ஞாயிரன்று விடுமுறையில் தோழியரின் கரம் பிடித்து..
வளையம்போல் கையிணைத்து ரிங்கா..ரிங்கா ரோஸசென்று
கத்திக் கத்தி சுற்றிச்சுற்றி நகர்ந்தபடி மல்லாந்து கீழேவிழ ஓராசை.
பாண்டியாட்டம் ஆடி ஆடி கட்டத்துக்குள் வீடு கட்ட..
மனசுக்குள்ளே ஓர் ஆசை..
நொண்டியடித்து விளையாடி அவுட்டாக்க ஓராசை...
கண்ணாமூச்சி விளையாடி களித்திடவே ஓராசை..
மீன்வளை விளையாட்டில் மீனைப்போல் தோழியையே..
பிடித்துபோட ஓராசை...
திருடா திருடா விளையாட்டில் திருடனைப்போல் பந்ததனை..
ஒளித்து வைக்க ஓராசை...
கிட்டிபபுள்ளு விளையாட்டை ஆடிப் பார்க்க ஓராசை..
பட்டம் விட்டு நூலறுத்துப் பாட்டுப்பாட ஓராசை...
பட்டாம் பூச்சிப் பின்னாலே ஓடித்திரிய ஓராசை...
மின்மினிகள் பல பிடித்து இரவில் பார்க்க ஓராசை...
குலை குலைக்கா முந்திரியில் தோழி முதுகடிக்க ஓராசை..
சின்னச் சின்ன சலங்கை கட்டி டான்ஸ் ஆட ஓராசை..
அழகழகாய் காலணிகள் அணிந்து பார்க்க ஓராசை...
என்ன பாபம் செய்தேனோ எதுவும் இதில் நடக்காது..
கண்ணிரெண்டில் கண்ணீர்தான்...என் காலிரெண்டும் caliper...