நட்புக்கு சமர்ப்பணம் - ராஜலக்ஷ்மி
கூடுகள் பலவாயினும்
கூடிக் களித்தோம் ஒன்றாக
குடும்பக் கவலைகள் பகிர்ந்திருந்தோம்
குறும்புகளிலே அதைத் தொலைத்திருந்தோம்
தொலைதூர நெடும் பயணம்
வழி நெடுக வெடிச் சிரிப்பு. . .
ஐயிரு கை ஒரு சேர
ஆட்டத்துடனே நடை பயின்றோம்
பாதையோர பெட்டிக்கடையில்
கொறித்திருந்தோம் சிறு தீனி
பறவையின் இறகுகட்கு
தூரமொரு பாரமல்ல. . .
ஒருவருக்கு நால்வருண்டு
ஒரு போதும் பிரியோம் என்றோம்
வாழ்கையின் ஓட்டத்திலே
வழிகள் பல தவறவிட்டோம்
பாதைகள் வெவ்வேறாய்
பயணங்கள் புது விதமாய்
என் வீடு, என் குடும்பம் என
தம் சுயத்தை தாமே இழந்தோம்...
தொலைத்த பிள்ளையை
தேடித் திரியும் அன்னையைக்
கண்டதுண்டு...
பிரியமான காதலி தனைத் தேடி
காதலன் கடல் கடந்து
சென்றதுண்டு ..
ஓராண்டே உடன் படித்த ஆருயிர் தோழி தனை
பல்லாண்டாய் தேடித் திரிந்த
நட்பினை,
உங்களில் தான் கண்டேனடி
கண்களில் நீர் கொண்டேனடி. . .
இக்கவிதை வருடங்கள் பல கழித்து எனை வந்து சேர்ந்த என்னுயிர் பள்ளித் தோழிகளுக்கும் இது போலவே பள்ளி நட்பினை நினைத்து வாழும் அனைத்து தோழிகளுக்கும் சில்சீ வாயிலாக சமர்ப்பணம்.
{kunena_discuss:779}