மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு - விசயநரசிம்மன்
அன்பு மனையாளே ஆருயிரே காதலியே
இன்பம் நிறைக்கும் இனியவளே - உன்பாலென்

நெஞ்சுறும் காதலை நேயத்தை நல்லதமிழ்
கொஞ்சிடும் வெண்பாவில் கூட்டியே, - வஞ்சமெலாம்
செய்யும் கரியவிரு சேல்விழியால் என்மனத்தை
உய்யும் வழியற்(று) உறுத்துவதும், - ஐயம்
சிறிதளவும் இல்லாச் சிநேகத்தால் உள்ளம்
பறிகொண்டு நீபடுத்தும் பாடும், - குறிகொண்டு
வம்பிற் கிழுக்கும் விளையாட்டும், மனத்தினையும்
கம்பிக்க வைக்கும் கலகமும், - அம்பிட்டு …………………5
வீழ்த்தற்போ லுஞ்சொல்லை வீசி மனக்கதவின்
தாழ்த்திற வாதநீள் சண்டையும், - வாழ்த்திடும்
வள்ளுவர் சொன்ன நுணுக்கத்தை வன்மையால்
எள்ளிடும் ஊடலின் இம்சையும், - உள்ளியே
பொய்யின் புகழும், புரிந்திடும் வாழ்வதன்
மெய்யும் கலந்து மிகையின்றி - செய்திடும்
பாவிது கண்மணியே பாரில்நீ வந்துதித்த
நாளினில் நல்லப் பரிசாக - ஆய
இருபத்தி யொன்பதுநல் ஆண்டிற்கும் ஒன்றாய்
இருபத்தி யொன்பதுநல் கண்ணி – இருத்தி …………………10
நலிவில்லாக் காதல் நலத்தை இனிய
கலிவெண்பா வாகக் கடிதம் - பொலிவுறவே
வாழும் தமிழாலே வாழ்த்தும் மரபோடே
சூழும் நலமெல்லாம் சூழ்கென - ஏழேழ்
பிறப்பிலும் என்னைப் பிரியாளா யாகி
இறப்பிலும் நீங்குதல் இல்லா - உறவில்
நிறைகவே நின்னை உணர்ந்திடும் உணர்வே
உறைகவென் உள்ளத்தின் உள்ளே - மறைகநம்
ஊடலும் ஊடலால் உள்சுடும் சொற்களைத்
தேடிடும் நம்கோவத் தீத்தீயும் - வாடுக …………………15
வாட்டமும் வாட்டும் வருத்தமும் கூடுகநம்
நாட்டமும் நட்பும் நலமனைத்தும் - ஈட்டியென
பாயும் பெருவிழிப் பார்வையும் பார்வையிலே
தோயும் மதுவுமென் தோளின்மேல் - சாயும்
நலமும் நலமுண் பவழ இதழும்
மலரும் முகத்தா மரையும் - கலக்கும்
விரல்தா மரையும் விரலால் அளைக்கும்
அறலின்மென் கூந்தல் அலையும் - நிரநிரலாய்
முத்துக்கள் வைத்த முறுவலும் அம்முறுவல்
பத்திக்கும் பச்சை மனமுமென - நித்தமுநான் …………………20
கண்டுகேட்(டு) உண்டுயிர்த்(து) உற்றும் அறியவும்
பண்டுபுதி(து) என்ற பகுப்புகள் - என்றும்
தெரியாத அன்பில் திளைக்கவும் கொஞ்சம்
நெரிக்காத ஊடலிடை நிற்க - முரியாத
இல்லற இன்பம் இயங்கவும் முன்னோர்கள்
சொல்லற மெல்லாமும் சூழவும் - நல்லாய்,
கல்வெட்டில் வாழ்ந்து கவிவாழ்ந்து ஓலைகளின்
சொல்வெட்டில் வாழ்ந்து சுடர்விட்டுப் - பல்வெட்டுக்
காகிதமும் வாழ்ந்து கணினிவரை வாழ்ந்திருக்கும்
மாகதிநல் செந்தமிழ்போல் வாழ்கவே, – பாகெனவே …………………25
வாழ்க்கை இனித்திட வாழ்க,பகல் வானமென
வாழ்க்கை பொலிந்திட வாழ்க,நிதம் - கூழ்க்கொடை
ஆற்றும் பொழுதின் அகமூர் அமைதியை
ஏற்ற மனத்தோடே என்றென்றும் - மாற்றமுறும்
வாழ்வினில் நன்மையே மாறாது வாய்த்துநீ
தாழ்விலா தென்றென்றும் தழைத்தே - ஆழ்வுறும்
என்காதல் நெஞ்சாம் இனியதவி(சு) ஏறியே
என்றென்றும் ஆள்க இனிது! …………………29
[வெண்பா]
உள்ளம் நிறைந்தாட்(கு) ஒருபரிசாய் யாத்தேன்நான்
கள்ளை நிகர்க்கும் கலிவெண்பா - உள்ளம்
நிறைந்தவளும் வாழ்க நிகரில்லா தென்றும்
நிறைந்ததமிழ் போலே நிலத்து!
அருஞ்சொற்பொருள்
3: உய்யும் - தப்பிக்கும் (உய்வு - விடுபடுதல், மோட்சம்!), ஐயம் - சந்தேகம்,
5: கம்பிக்க வைத்தல் - நடுங்க வைத்தல்,
7: வள்ளுவர் சொன்ன நுணுக்கம் - புலவிநுணுக்கம் அதிகாரம் (ஊடல் செய்யும் நுட்பம்), உள்ளியே - மனசில் நினைத்தே,
9: பார் - உலகம், பாரில் வந்து உதித்த நாள் - பிறந்தநாள்,
10: கண்ணி - இப்பாடலில் இரண்டிரண்டாக வரும் அடிகளுக்குப் பெயர் (கலிவெண்பா இப்படித்தான் அமைக்கப்படும்! 12 அடிக்கு மேல் நீளும் வெண்பாக்கள் ‘கலிவெண்பா’ எனப்படும்!),
18, 19: இவற்றில் என் மனைவியின் பெயர் வரத்தொடுத்துள்ளேன் (தாமரை),
21: பண்டு - பழையது,
24: தமிழின் சிறப்பு - எனக்கு மிக பிடித்த கண்ணி இது, :-)
25: பாகு - வெல்லப் பாகு (இனிமையைக் குறித்தது,)
26, 27: கூழ்க்கொடை - அன்னதானம்,
29: தவிசு - சிம்மாசனம் (நெஞ்சம் தவிசானது உருவகம்)
{kunena_discuss:779}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.