மனைவிக்குப் பிறந்தநாள் பரிசு - விசயநரசிம்மன்
அன்பு மனையாளே ஆருயிரே காதலியே
இன்பம் நிறைக்கும் இனியவளே - உன்பாலென்
நெஞ்சுறும் காதலை நேயத்தை நல்லதமிழ்
கொஞ்சிடும் வெண்பாவில் கூட்டியே, - வஞ்சமெலாம்
செய்யும் கரியவிரு சேல்விழியால் என்மனத்தை
உய்யும் வழியற்(று) உறுத்துவதும், - ஐயம்
சிறிதளவும் இல்லாச் சிநேகத்தால் உள்ளம்
பறிகொண்டு நீபடுத்தும் பாடும், - குறிகொண்டு
வம்பிற் கிழுக்கும் விளையாட்டும், மனத்தினையும்
கம்பிக்க வைக்கும் கலகமும், - அம்பிட்டு …………………5
வீழ்த்தற்போ லுஞ்சொல்லை வீசி மனக்கதவின்
தாழ்த்திற வாதநீள் சண்டையும், - வாழ்த்திடும்
வள்ளுவர் சொன்ன நுணுக்கத்தை வன்மையால்
எள்ளிடும் ஊடலின் இம்சையும், - உள்ளியே
பொய்யின் புகழும், புரிந்திடும் வாழ்வதன்
மெய்யும் கலந்து மிகையின்றி - செய்திடும்
பாவிது கண்மணியே பாரில்நீ வந்துதித்த
நாளினில் நல்லப் பரிசாக - ஆய
இருபத்தி யொன்பதுநல் ஆண்டிற்கும் ஒன்றாய்
இருபத்தி யொன்பதுநல் கண்ணி – இருத்தி …………………10
நலிவில்லாக் காதல் நலத்தை இனிய
கலிவெண்பா வாகக் கடிதம் - பொலிவுறவே
வாழும் தமிழாலே வாழ்த்தும் மரபோடே
சூழும் நலமெல்லாம் சூழ்கென - ஏழேழ்
பிறப்பிலும் என்னைப் பிரியாளா யாகி
இறப்பிலும் நீங்குதல் இல்லா - உறவில்
நிறைகவே நின்னை உணர்ந்திடும் உணர்வே
உறைகவென் உள்ளத்தின் உள்ளே - மறைகநம்
ஊடலும் ஊடலால் உள்சுடும் சொற்களைத்
தேடிடும் நம்கோவத் தீத்தீயும் - வாடுக …………………15
வாட்டமும் வாட்டும் வருத்தமும் கூடுகநம்
நாட்டமும் நட்பும் நலமனைத்தும் - ஈட்டியென
பாயும் பெருவிழிப் பார்வையும் பார்வையிலே
தோயும் மதுவுமென் தோளின்மேல் - சாயும்
நலமும் நலமுண் பவழ இதழும்
மலரும் முகத்தா மரையும் - கலக்கும்
விரல்தா மரையும் விரலால் அளைக்கும்
அறலின்மென் கூந்தல் அலையும் - நிரநிரலாய்
முத்துக்கள் வைத்த முறுவலும் அம்முறுவல்
பத்திக்கும் பச்சை மனமுமென - நித்தமுநான் …………………20
கண்டுகேட்(டு) உண்டுயிர்த்(து) உற்றும் அறியவும்
பண்டுபுதி(து) என்ற பகுப்புகள் - என்றும்
தெரியாத அன்பில் திளைக்கவும் கொஞ்சம்
நெரிக்காத ஊடலிடை நிற்க - முரியாத
இல்லற இன்பம் இயங்கவும் முன்னோர்கள்
சொல்லற மெல்லாமும் சூழவும் - நல்லாய்,
கல்வெட்டில் வாழ்ந்து கவிவாழ்ந்து ஓலைகளின்
சொல்வெட்டில் வாழ்ந்து சுடர்விட்டுப் - பல்வெட்டுக்
காகிதமும் வாழ்ந்து கணினிவரை வாழ்ந்திருக்கும்
மாகதிநல் செந்தமிழ்போல் வாழ்கவே, – பாகெனவே …………………25
வாழ்க்கை இனித்திட வாழ்க,பகல் வானமென
வாழ்க்கை பொலிந்திட வாழ்க,நிதம் - கூழ்க்கொடை
ஆற்றும் பொழுதின் அகமூர் அமைதியை
ஏற்ற மனத்தோடே என்றென்றும் - மாற்றமுறும்
வாழ்வினில் நன்மையே மாறாது வாய்த்துநீ
தாழ்விலா தென்றென்றும் தழைத்தே - ஆழ்வுறும்
என்காதல் நெஞ்சாம் இனியதவி(சு) ஏறியே
என்றென்றும் ஆள்க இனிது! …………………29
[வெண்பா]
உள்ளம் நிறைந்தாட்(கு) ஒருபரிசாய் யாத்தேன்நான்
கள்ளை நிகர்க்கும் கலிவெண்பா - உள்ளம்
நிறைந்தவளும் வாழ்க நிகரில்லா தென்றும்
நிறைந்ததமிழ் போலே நிலத்து!
அருஞ்சொற்பொருள்
3: உய்யும் - தப்பிக்கும் (உய்வு - விடுபடுதல், மோட்சம்!), ஐயம் - சந்தேகம்,
5: கம்பிக்க வைத்தல் - நடுங்க வைத்தல்,
7: வள்ளுவர் சொன்ன நுணுக்கம் - புலவிநுணுக்கம் அதிகாரம் (ஊடல் செய்யும் நுட்பம்), உள்ளியே - மனசில் நினைத்தே,
9: பார் - உலகம், பாரில் வந்து உதித்த நாள் - பிறந்தநாள்,
10: கண்ணி - இப்பாடலில் இரண்டிரண்டாக வரும் அடிகளுக்குப் பெயர் (கலிவெண்பா இப்படித்தான் அமைக்கப்படும்! 12 அடிக்கு மேல் நீளும் வெண்பாக்கள் ‘கலிவெண்பா’ எனப்படும்!),
18, 19: இவற்றில் என் மனைவியின் பெயர் வரத்தொடுத்துள்ளேன் (தாமரை),
21: பண்டு - பழையது,
24: தமிழின் சிறப்பு - எனக்கு மிக பிடித்த கண்ணி இது, :-)
25: பாகு - வெல்லப் பாகு (இனிமையைக் குறித்தது,)
26, 27: கூழ்க்கொடை - அன்னதானம்,
29: தவிசு - சிம்மாசனம் (நெஞ்சம் தவிசானது உருவகம்)
{kunena_discuss:779}