எமன் பேசுகிறேன் - விசயநரசிம்மன்
என்ன அவசரமோ?
என்னை அடைவதற்கு?
மின்னல் வேகத்தில் – உயிரை
விட்டு மாய்வதற்கு?
பெற்றவள் கண்ணீரைப்
பெருக்கி அழுவதையும்
உற்றவள் உடைவதையும் – காண
உனக்கிந்த அவசரமோ?
சாலைகள் உனக்குமட்டும்
சமைக்கப் பட்டனவாய்
மூளை இல்லாமல் – மகனே
முடிவே செய்தாயோ!
மேதினி பொதுவென்றார்
மேல்கீழ் இலையென்றார்
வீதிக்கும் அதுபொருந்தும் – மகனே
விட்டுக்கொடுத்து வாழ்!
விதிகள் மீறுவதே
வீரம் என்பாயோ?
அதில்தான் ஆனந்தம் – என்றே
அவசரம் கொண்டாயோ?
வண்டியில் உட்கார்ந்தால்
வானத்தில் பறப்பதுபோல்
எண்ணம் கொள்வாயோ? – எமன்நான்
இருப்பதை மறப்பாயோ?
உன்னுயிர் ஒருபொருட்டாய்
உனக்கு இல்லையெனில்
இன்னோர் உயிரையும்நீ – விபத்தில்
இறந்திடச் செய்வாயோ?
உந்தன் மடமையினால்
ஊறிய சுயநலத்தால்
எந்தன் வேலையைநீ – மடையா
ஏற்றுக் கொள்வாயோ?
விதியொடு விளையாட
வீதியில் முயலாதே!
அதைவிட உன்திறனை – காட்ட
ஆயிரம் இடமிருக்கு!
சாலை விதிகளைநீ
தவறியும் மீறாதே!
நாளையை நலமாக்கு – உலகை
நந்த வனமாக்கு!
{kunena_discuss:779}