பெண் சுதந்திரம்????? - சிவரஞ்சனி
நாம் சுதந்திரம் பெற்றுள்ளோமாம்!!!
ஆமாம்! ஆமாம்!!ஆமாம்!!!
கல்வி பெற்றோம்!
கற்ற பாடம்?
கல்யாணச் சந்தையில் கூடுதலாக நகைகள்,சீர்வரிசை,ஆ...டம்பர வரவேற்பு விழா,மணப்பெண் வீட்டாரின் மகிழ்ச்சியை மண்ணில் புதைக்கும் மகிழுந்து
இவை எல்லாம் தர வேண்டும்,இணையாக கல்வி பெற்ற மாப்பிள்ளைக்கு!!
பணிக்குச் செல்கிறோம்!
பெற்ற ஊதியம்?
இல்லம்,தெரு,பேருந்து,
அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்
ஏச்சுக்களும்,ஏளனங்களும்,
தாராளமாகக் கிடைக்கும் தொல்லைகளும்!!
அனைத்து துறைகளிலும் கால் பதித்துள்ளோம்,
மிகச்சில பெண்கள் மட்டுமே!அதுவும் மிகுந்ந்ந்..த போராட்டங்களுக்குப் பின்னரே!!
கல்வியோ,திருமணமோ,பணியோ,புதிய துறையில் கால் தடமோ,அடுத்தவர்(ஆடவர்)
திணித்த முடிவுகளை நமது முடிவுகளாக அங்கீகரித்தால்,
போற்றப்படுவோம்!புகழப்படுவோம்!!
இல்லையேல்,
தூற்றப்படுவோம்!
தூக்கி எறியப்படுவோம்!!
நம்மை தெய்வம் என்கிறார்கள்!!
உள்ளர்த்தம்?
அவர்கள் கூறும் நியதி என்ற கருவறைக்குள் சிறை இருக்க வேண்டும்!
உணர்வுகள் உதிர்த்து,கனிவான கற்சிலையாய்த் தோற்றமளிக்க வேண்டும்!
தவறிழைத்தால்,தட்டிக் கேட்காமல்,தண்டனை வழங்காமல் மன்னிக்க வேண்டும்!
அவர்கள் விரும்பியவற்றை எல்லாம் அள்ளி வழங்க வேண்டும்!
இதற்கெல்லாம் அந்த தெய்வமே திணறித்தான் போகிறது!
ஆனால் நாமோ எவ்வ்வ்..வளவு அடித்தாலும் தாங்குகிறோம்!
உண்மையில் நாம் அடிமைப்பட்டுள்ள களங்களே மாறியுள்ளன!
அடிமைத்தனம் மாறவில்லை!
சுதந்திரம் என்ற பெயர் கொண்ட சிறையில்,நம்மை நாமே சிறை வைக்கத் தள்ளப்பட்டுள்ளோம்!!!
எங்களுக்கு,சுதந்திரச் சிறை வேண்டாம்!
இட ஒதுக்கீடு வேண்டாம்!
நாங்கள்,நாங்களாக வாழ ஆசைப்படுகிறோம்!
வாழ விடுங்களேன்!
எங்களோடு இணைந்து வாழுங்களேன்!!!
{kunena_discuss:779}