காதலாகி கசிந்தேன் - கிருஷ்ணபாபு
எதையோ இழந்தேன்.
எதையோ உணர்ந்தேன்.
தொலைந்தது தேடி
தொடர்ந்தேன் ஒரு விசாரணை.
இறுதியில் கண்டது உன்னோடு
என்றன விழிகள்.
'இருக்கும் இருக்கும்' என்றன
எகிறிக் குதித்த ஹார்மோன்கள்.
தந்தை தந்த சுடரது.
தாய்க்கு வாய்த்த வரமது.
இதுவரை நான் உணர்ந்ததில்லை.
உணர்ந்த இன்று அது எனதில்லை.
உன் பாதையில் எங்கேனும்
பதுங்கி இருக்கலாம்.
உன் பார்வை படாது ஏங்கி
உடைந்து இருக்கலாம்.
உன்னிழல் மிதிபடாது சூரியனை
மேகமாய் மறைத்து இருக்கலாம்.
உன் தலை கோதும் காற்றினுள்
பதமான ஈரமாய் இருக்கலாம்.
உன் மூச்சினில் புகுந்து இதயத்தில் தன் உருவம் தேடி இருக்கலாம்.
உன் பேச்சினில் குளிர்ந்து
உதட்டோரம் உறைந்து இருக்கலாம்.
உன் விரலுக்கு ஏங்கிய அகலிகனாய்
தொடுதிரையின் pixel ஆகி இருக்கலாம்.
doubletick bluetick ஆக மாற மௌனமாய்
ஜெபிக்கும் whatsapp msgஆகி இருக்கலாம்.
உனைச் சூழ்ந்த தீவுக்கடலென
எதிலும் எங்கேயும் எப்போதும்
விரவிக் கிடக்கலாம்.
எங்கே நீ கண்டாலும்
எப்போது நீ உணர்ந்தாலும் அதை
இறுதிவரை வைத்திடு…
அல்லது
இறக்கும்வரை மிதித்திடு…
உனக்குப் பிடிக்காதது
எனக்கு மட்டும் எதற்கு?
அது
என்னுயிராய் இருப்பினும்……
{kunena_discuss:779}