கவிதைத் தொடர் - கண் கண்ட கவிதைகள் - 01 - நான் நேசிக்கும் எதிரி நீ! - ஈஸ்வரி
நான் பேச நினைக்கும் வார்த்தைகளுக்கு
எதிரான மௌனம் நீயடா!
நான் காண விழையும் புதுமைகளுக்கு
புரியாத புதிர் நீயடா!
நான் செதுக்கி வைக்கும் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளி ஆகிடும் நிஜம் நீயடா!
நீயே என் முகவரி என நான்
வாய்மொழிய,
நீயோ முரண்பாடுகளின்
உருவமாகிறாய்!
வெறுக்கிறேன்.. வெறுக்கிறேன்..
வேரோடு அறுக்கிறேன்!
உன்னை வெறுக்க முடியாத என்னையே வெறுக்கிறேன்!
உன்னை அசைத்தும் பார்க்காத என் காதலை வேரோடு அறுக்கிறேன்!
எல்லாம் முடிந்ததாய் நானே சொல்லிக் கொண்டு
எட்டி நகர்கிறேன் நீ கட்டிப் பிடிப்பாய் என்ற எதிர்ப்பார்ப்பில்!
நீயோ சிரிக்கிறாய்.. சிதைய வைக்கிறாய்!
நொடிக்கு ஒருமுறை சிறையில் நிறுத்துகிறாய்..!
நீ நிறுத்தாமல் போனாலும் என் உலகம்
நின்றே போகிறது!
நீ தடுக்காமல் போனாலும் என் இலக்கு
தடம் மாறுகிறது!
நானும் தடம் மாறுகிறேன்..
கோபத்தில் இருந்து இடம் மாறுகிறேன்!
உன்னை காதலித்துக் கொண்டே வெறுத்தால் என்ன?
உள்ளம் கள்ளத்தனமாய் சிணுங்கிட,
காற்றை விட வேகமாய் வந்து
உன்னுள் புதைகிறேன்..!
அதிகம் நேசித்தாலும்,
உன்னை நான் வெறுக்கிறேன்..
எவ்வளவு வெறுக்கிறேனோ, அதைவிட
ஆழமாய் காதலிக்கிறேன்!
என்னை விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில்
பாண்டியாட வைக்கும் நீதானடா,
என் செல்ல எதிரி!
ஹாய் ப்ரண்ட்ஸ்… வருஷம் பொறந்து நம்ம சந்தோஷத்துக்காக புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போத்தான் இது தோனிச்சு..அதாவது, வாழ்க்கையில எவ்வளோ இன்னல்ஸ் தொல்லைஸ் வந்தாலும், சில விஷயங்களை ரசிக்காமல் இருக்கவே முடியாது..
இசை, மழை, தமிழ் இப்படி சொல்லிட்டே போகலாம்.. அதில் நான் ரொம்பவே ரசிக்கிற ஒரு விஷயம் சினிமா.. சினிமாவில் சில காட்சிகளை பார்க்கும்போது மட்டும் முகத்துல அப்படி ஒரு புன்னகை எட்டி பார்க்கும்..
எப்படி? அப்ப்ப்ப்டி!!!
அப்படி புன்னகைக்க வைக்கிற தருணத்துல “ப்பா..என்ன சீன்மா! கவிதை மாதிரி இருக்குன்னு தோணும்!” .. நான் அதை வாய்விட்டும் சொல்லிக்குவேன்.. சோ அந்த மாதிரி என் கண்கள் கண்டு உருவாகிய கவிதைகளைத்தான் அவ்வப்போது தொகுப்பாக உங்களுக்கு காட்ட போறேன்.
உங்களுக்கும் இந்த சீன் பிடிச்சிருந்த அதைப்பத்தி வாங்க பேசலாம். இம்முயற்சிக்கு வாய்ப்பளித்த சில்சீக்கு நன்றிகள்:) பாய் பாய்..
{kunena_discuss:779}