கவிதைத் தொடர் - கண் கண்ட கவிதைகள் - 02 - சுவரைத் தாண்டிட துடிக்கிறது! - ஈஸ்வரி
மொழிந்து விடுவதெல்லாம் மொழியாகிடுமா?
மௌனத்தை விட வலிமை கொண்ட மொழி எது?
காதலை தேடி நயனங்களுக்குள் ஊடுருவினால்,
அவன் விழிகளிலோ ஆழம் தெரியாத ஆழ்கடல்!
எங்கே மூழ்கி எங்கே மூச்செடுப்பது?
எதைப் பிடித்து கரையேறுவது?
சொல்லிவிட்டால் பாவங்களும் திருத்தங்கள் ஆகிடும்,
சொல்லாத புண்ணியங்களோ யார் கணக்கில் சேர்ந்திடும்?
தள்ளி நின்று வேடிக்கை பார்க்க அந்நியவளும் இல்லை..!
கட்டி வைத்து கேள்வி கேட்க உரிமையும் இல்லை..!
வேதனையில் உழல்வதற்கா
வேதம் ஓதி கரம் பிடித்தான்?
தனக்கென இடமிருந்தால் அவன் மனமானது
மர்மவாசல் என்றாலும் கடந்திடலாம்!
அவனோ பார்வையிலேயே திசைப் பிரிக்க
பிரியங்கள் எங்கே போகும்?
பேச்சும் இல்லை.. நிம்மதி மூச்சும் இல்லை!
ஏசிக்கொள்ளவும் பேச முயற்சிக்கவில்லை!
சீனப் பெருஞ்சுவராய் பனித்திரை நீண்டிட,
சுவரைத் தாண்டிடத் தான் துடிக்கிறது
காதல் கொண்ட ஒரு மனது!
{kunena_discuss:779}