கவிதைத் தொடர் - கண் கண்ட கவிதைகள் - 03 - மீண்டும் மழலை பருவம் காண்கிறேன் - ஈஸ்வரி
உன்மத்தமாகிய விதிகளும்
உன் வசமாகிய உணர்வுகளும்
எதிரெதிராய் உராய்ந்து கொள்ள (கொல்ல)
எனக்கு நானே பார்வையாளன் ஆனேனடீ!
காதலா இல்லை எனக்குள்?
கண்ணில் படுவதெல்லாம் கருத்தில் நிலைத்திடுமாம்!
காதல் தாரகையாய் கண்ணெதிரில் நீ உலவ,
காதல் நுழைந்திடவே வேறு வாசல் வேண்டுமா?
திருமண பந்தத்தில் மறுமணமாய் நீ கமழ,
என் மௌன தேசத்தில் மயிலிறகால் பூகம்பம்!
உள்ளத்தின் காதலையெல்லாம் சீதனமாய் நீ தந்திட
எப்படி உரைப்பேன் உன்னிடத்தில் அன்று வேறொருத்தி என?
கடந்த காலம் என்றுவிட்டு கடக்கவும் முடியாமல்
எதிர்காலத்தை நோக்கி எட்டு வைக்கவும் முடியாமல்
நிலைகுலைகிறேன் நம் நிகழ்காலம் கண்டு!
இத்தனை வலிகள் கடந்தும் எனக்கு புது இதம்!
காதலிக்கப்படுவதில் இதுவும் ஒருவிதம்!
என்னை பிரிய மறுத்து உன் விழிகள் கசிகையில்
எனக்குள் தலைத்தூக்கும் குறும்புடன் கர்வம்!
இது வீண் கர்வமில்லை!
உன்பால் நான் வீழ்ந்த கர்வம்!
உன் அன்பால் நீ என்னை வீழ்த்திய கர்வம்!
நிலவு தொடர்வதாய் எண்ணி சிறுவயதில்
அதை விட்டு ஓட்டம் பிடித்து ரசித்தவன் போல,
எனை நீ துரத்துவதை ரசித்து இன்றும் ஓடுகிறேன்
உன்னால் மீண்டும் மழலை பருவம் காண்கிறேன்!
வணக்கம் நண்பர்களே, கடந்த பதிவில் தோழி தேன்மொழி சொன்னதுபோலவே இனிவரும் கவிதைகளில் காட்சியைப் பற்றிய சில தகவல்களை சொல்லி விடுகிறேன்.
அவ்வகையில் இக்கவி, இரண்டாவது கவிதையின் “எசப்பாட்டு” என்றும் சொல்லலாம்! Bangalore Days திரைப்படத்தில் Ente Kannil என்ற பாடலில் வரும்காட்சிகளின் பின்னணியில் வந்த கவிதை இது.
கடந்த பதிவில் தோழர் “ஷக்தி” Fahad இன் உணர்வுகளைப் பற்றி யோசிப்பதை போல கருத்து தெரிவிக்கவும் இக்கவிதை பிறந்தது. பிடித்திருந்தால் மகிழ்ச்சி..பிழையேதும் திருத்தப்பட்டால் இன்னும் மகிழ்ச்சி..
அடுத்த கவியில் சந்திக்கிறேன்.
{kunena_discuss:779}