கவிதை - கண்ணிலா ஓவியம் - K.சௌந்தர்
என்னவனே உன் நேசத்தைப் பெற எவ்வளோ முயல்கின்றேன்
எண்ணெய் ஊற்றி வழுக்குப் பாறையில் ஏற முயன்ற கதையானது
எனக்கும் உனக்குமான காதல் கதை.
கணவனைத் தான் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடன்
கல்லூரி கடந்தும் காளையரை ஏறிட்டுப் பார்க்காமல் என்
காதல் முழுவதையும் உன் காலடியில் சமர்பித்தேன்
கண்ணே மணியே என கொஞ்சிட வேண்டாம் என்னை
காதலுடன் ஒரு பார்வைபார்த்தாலே போதும் என நினைத்தேன்
கற்சிலையாய் நின்றாய் என் கர்மவினை இதுவோ
பல நாள் நினைவில் நான் சேமித்து வைத்த காதல்
பசிக்காதவன் கையில் கிடைத்த பால்சோறு போன்று
பலனற்று போனதால் பதறி நிதம் துடித்தேன்.
எப்படியோ மணந்துவிட்டோம் இனி
என் வாழ்வு உன்னோடுதான் எதையும்
எதிர்பார்க்காமல் வாழப் பழகிவிட்டேன் ஆனால்
கடமைக்கு வாழும் காதல் இல்லா வாழ்வு
கண்ணில்லா ஓவியத்திற்குத் தான் ஒப்பாகும் இதை
காலம் கடப்பதற்குள் உணர்வாயா
{kunena_discuss:779}