கவிதை - வண்ணங்களைத் தேடும் வானவில்கள் - நிரஞ்சனா
கருவிலும் நெஞ்சிலும்
முன்னூறு நாட்கள்
சுமந்து பெற்றார்கள்
ஒவ்வொரு இரவும் பகலும்
அதையே நினைத்து
வாழ்ந்தார்கள்....
கனவுக் கோட்டைகளை
கட்டினார்கள்
அதன் வரவிற்காக...
பின் ஏன் அவ்வாறு
செய்தார்கள் ...?
டீக்கடையில் உணவகங்களில்
எடுபிடியாய்,
கட்டிடம் கட்டும் தொழிலில்
செங்கல் சுமப்பவராய்,
தெருவோரங்களில்
கையேந்துபவராய்,
இன்னும் பல இடங்களில்
கூலிகளாய்....
இவ்வாறு ஆக்கத்தான்
அவ்வாறு சுமந்தார்களா?
மற்ற குழந்தைகள்
பள்ளிக்குச் செல்ல
இவர்கள் மட்டும்
தங்கள் எதிர்காலத்தை
அடகு வைப்பதேன்
மீட்க முடியாத
வட்டியுடன்?
ஓடி விளையாட வேண்டிய
வயதில் ஓயாமல்
உழைப்பது
எதற்காக? யாருக்காக?
தன் குழந்தைக்குக் கூட
உணவும் கல்வியும்
தர இயலாதவர்கள்
ஏன் பெற வேண்டும்?
தனக்கும் சேர்த்து
உழைக்கத் தான்
பெற்றார்களா?
இந்த மூடர்களை
என்னதான் செய்வது?
தன் கண்ணில்
எதிர்கால கனவுகளைச்
சுமந்து, நிராசையுடன்
உழைக்கும் இந்த
வானவில்கள் தங்கள்
வண்ணங்களை
மீட்டெடுக்க
இத்தமிழ் புத்தாண்டில்
வழிவகை செய்வோம்.
{kunena_discuss:779}