கவிதை - நான் நானாகவே வேண்டும் - நிரஞ்சனா
நான் நானாய்
வேண்டும்
திருப்பித் தர
தான் இயலுமா
உங்களால்
கண்டவன் பசிக்கு
நான் ஏன்
இரையாக்கப் பட்டேன்
நட்ட நடு இரவில்
சுதந்திரமாக நடமாட
வேண்டும் என்றா
கேட்டேன்
பகலில் அனைவரும்(ஆண்கள்)
தங்கள் கடமையை
சுதந்திரமாக செயலாற்ற
என்னை மட்டும்
ஏனடா சிதைத்தீர்கள்
நான் பெண்ணாக
பிறந்தது தவறென்று
முட்டாள் போல்
எண்ணி குமுறிட
மாட்டேன் மாறாக,
ஆணாக பிறக்க
தகுதி இல்லாத
உங்களை படைத்த
இறைவனை பழிக்கிறேன்
(அப்படி யாரேனும் இருந்தால்)
உடலளவில் பலமிருந்து
எதற்கு உங்கள்
மனம் ஊனமாய்
உள்ளதே
நீ பிறந்ததும்
பாலூட்டியது உன்
தாயின் மார்பகங்கள்
உன் சகோதரியின்
வளர்சிதை மாற்றங்களை
கண்டு தானே
வளர்ந்திருப்பாய்
உன் மனைவியின்
உடலை ஆராய்ந்து
தானே இருப்பாய்
உன் மகள்
பிறந்த போது
நீ கண்டது
ஆடைகளில்லா
அவள் வெற்றுடம்பை
தானே
அவர்களிடம் நீ
கண்டது தானே
எண்ணிடமும்
அதுவும் ஆடைகளுடன்
பின்பு ஏன்
அந்த வெறி என்னில்
உன்னைவிட ஊனமானது
இச்சமூகம்..
கொடுமை இழைத்த
உன்னை கொல்லாமல்
என்னை பாவமாக்கி
பரிதாபம் கொண்டு
உன்னைக் காக்க
முயல்வதேனோ...
இச்சமூகம் என்
நிலை கண்டு
ஆனந்தம் அடைகிறதோ
ஏன் எனக்காக
போராட தயாராயில்லை
இக்கொடூரனின்
குடும்பத்தை பழிக்காமல்
என்னவர்களை கொல்ல
முயல்வதேன்...
குற்றவாளிகள் படம்
பெரிதாக இல்லாமல்
என் படம்
பெரிதாக்கப்பட்டு
உலாவருவதேனோ
ஊடகங்களில்
யாரைச் சொல்லியென்ன
கேவலம் நீங்கள்
கையால்
ஆகாதவர்கள் தானே
உங்களால் என்ன
செய்துவிட முடியும்
இன்று நான்
நாளை உங்கள்
பெண்களில் யாரோ
அவர்களை யாவது
இக்கொடியவர்
கண் படாமல்
காப்பாற்றிக் கொள்ளுங்கள்
{kunena_discuss:779}