கவிதை - காத்திருப்பு - ரம்யா
வருடம் வரும் பண்டிகைகளில்
வாசல்கோலம் வந்து நிற்கும் உன் கால்களுக்காய் காத்திருந்தேன்
புது மகளின் கைமணம் மெச்சி என்
ஆசை கிழவி கோபம் காண காத்திருந்தேன்
தோட்டத்து மல்லிகைகள் சேர்த்து வந்து என்
பேத்தியின்அரையடி கூந்தல் அலங்கரிக்க காத்திருந்தேன்
வேற்றுமொழி ஆனபோதும் தத்தி தத்தி நடந்துவந்து
செவி நிறைக்கும் பேரனின் மழலைக்காய் காத்திருந்தேன்
ஓயாத ஓட்டத்தின் ஒழுகாத நினைவுகளை
தோள் மிஞ்சிய தோழனாய் பலவும் பகிர காத்திருந்தேன்
பசுமையாய் பல நினைவுகள் சிறுசுகள் மனத்தில் ஏற்றி
அற்ப ஆயுள் முடிந்தபின்னும் நினைவில் வாழ காத்திருந்தேன்
காலன் அவன் வாசல் நிற்க கண்கள் பல கலங்கி நிற்க
மூச்சுநின்றும் இரண்டுநாளாய் கண்மூடி காத்திருக்கிறேன்
குளிர்பெட்டிக்குள்!