(Reading time: 2 - 3 minutes)

கவிதை - என் அருணன் அவன்..! - சந்யோகிதா

love

வாசற் கோலத்தை களவுகொண்ட

வானவில் வண்ணங்களே..!

வானாளாவிய வசந்தம் 

நான் காண்கிறேன்..

என் கண்ணனின் மாயச்சிரிப்பினில்..!!

மாயமாய் மறைந்ததேனோ..?

மங்கையிவள் மனதை 

மொழியும் முன்னே.. 

போகட்டும்...!

 

பாலருந்த மறுக்கும் பாலகனாய்

குதித்தோடும் மேகங்களே..!

குறைவிலா வர்ணனை

நான் வடிக்கிறேன்..

என் மன்னவனின் காதல்கவிகளில்..!!

குன்றின்பின் குடிகொண்டதேனோ..?

கன்னியிவள் களவுபோன 

கதை கூறும்முன்னே..

போகட்டும்...!

 

பழந்தமிழ் பட்டம் பெற்ற

கொஞ்சும் பசுங்கிளிகளே..!

கேட்டறியா காதல்மொழி

நான் கூறுகிறேன்..

என் தலைவனின் விழிப்பார்வையில்..!!

பறந்து சென்றதேனோ..?

பாவையிவள் பைத்தியமானதை

பறையடிக்கும் முன்னே..

போகட்டும்..!

 

பூமிமடியில் களைப்பு கலைய

உறங்கும் உறைபனிகளே..!

உறக்கமின்றி பல இரவுகள்

நான் தவிக்கிறேன்..

என் உற்றவனின் உரிமையில்..!!

உருகிப் போனதேனோ..?

பெண்ணிவள் பற்றினை

பட்டியலிடும் முன்னே..

போகட்டும்..!

 

கல்லுக்கும் கனிவில்லை போலும்..

காதலனின்றி தவிக்கும்

குமரியிவளை நலம்காண..!

போகட்டும்..!

 

நாற்பண்புகள் நான் கொண்டு

நிழற்படமதில் உறைந்து 

நிற்கும் என் அருணனிடமே

மொழியின்றி உரைக்கிறேன்..!

அவன்பால் கொண்ட

நெஞ்சம் நீங்கா என் நேசத்தை..!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.