கவிதை - ஊழிய அலுவலுக்கோர் மடல் - சந்யோகிதா
என் தவத்தின் வரம் நீ
என் வாழ்வின் சாபமும் நீ
என் தனிஅடையாளம் நீ
என் அதிஆக்கிரமிப்பும் நீ
என் ஆசைச்செம்மல் நீ
என் வெறுப்புத்தனலும் நீ
என் புண்ணியதலம் நீ
என் கண்ணீர்நதியும் நீ
மறுக்க நினைத்தும்
மறக்க நினைத்தும்
மதுபோதையாய் என்
மதியை ஆட்கொள்கிறாய்..
எனைப் பற்றித் தொடரும்
உன்னிடம் விடைபெறும்
என் அகவை கொண்டாட
அணுவணுவாய் கடக்கிறேன்
எதிர்ப்படும் நாழிகையை..!
இப்படிக்கு
-ஊழிய சிப்பந்தி