கவிதை - மழை மங்கையின் மனவேதனை..! - சந்யோகிதா
சொற்பேச்சு கேளாமல் காதல்தேடி
சென்ற நன்னீர் பெண்ணவள்!
உரிமையானவன் உரைத்த போதும்
உதறித்தள்ளி ஓடோடி வந்தாள்!
தாய்வீட்டு வாசலில் வரவேற்க
எவருமில்லை வேதனையுற்றாள்!
வாசற்கோலம் அழிய கண்ணீர்
பொழிந்து தேம்பும் மழையானாள்!
அழைப்பு மணியாய் அசரீரி
செய்தும் அணுவளவு பலனில்லை
இடியிடிக்க ஈன்றோர் உறவை
இம்சித்தும் மனம் இறங்கவில்லை!
மின்னலொளி பிடித்து பிறப்புரிமையை
மண்ணில் தேடி அலைகிறாள்!
இறுதியில் இறுமாப்பு கரைய
அழுதழுது ஓய்ந்து மறைகிறாள்!
மறைந்த பின்பும் தாய்வீட்டில்
அவளது நேசம் மண்வாசமாய்..!
கட்டியகணவன் கதிரவனாய் வந்து
காதல் தேவதையின் கண்ணீரை..
புண்ணிய நீராய் அவனுள்
பத்திரப் படுத்தி போகிறான்..!!