கவிதை - பொய்யோ...? மெய்யோ..? - சந்யோகிதா
இறைவா..!
எனக்கென நீ படைத்த துணை இவன்தானோ..?
புகைப்பட சுருளில் புன்னகையைச்
சிதறவிட்டு சிந்தை திருடியவன்
என் பிறவித்துணை தானோ..?
கனாக்களில் கடற்கரை அலையாய்
மீண்டும் மீண்டும் அறிமுகமின்றி
எனை நனைத்து மறைவதும்
இதமளிப்பதும் இவன்தானோ..?
பொய்யோ மெய்யோ மெய்ஞானம்
நானிழந்தேன் இவன் வசம்..!
எங்கனம் மீட்பேன்...?
இவன் நினைவின் பின்னால்
நிழலாய் போகும் என்மனதை...?
இது இயற்கையின் இயல்போ..?
உண்மையில் உணர்வின் விளைவோ.?
இரக்கமற்ற என்விதியின் சதியோ..?
என்னுயிரை ஈகை தந்த இறைவா..!
நிஜம் வேறிருக்க இவன் நிழலெனில்
உண்மை உணர்த்திவிடு எனக்கு
உயிர்மறுக்கும் பலமும் தந்துவிடு..!
நிழலில்லா விதி நிராகரித்து
நெஞ்சம் புகுந்த நிழலுடன்
நீங்கா ஓய்வில் நிலைக்கட்டும்
கல்லறையில் என் காதல்..!!