கவிதை - எங்கோ ஒரு அழுகுரல் - தானு
நிஷப்தமான இருளில்
நிறைந்த நிலவொளியில்
கரைந்த கண்ணீருடன்
கலையாத முக அழகுடன்
அங்கோர் மழலை
வீச்சறுவாள் வீசும்
வீராப்பான உலகிலே
வாசமலர் மழலை அது
வாடிக்கிடந்த கோலம் தான்
வானவரையும் வாட்டியதே
பயங்கரமான உலகிலே a
பரிதவிக்கும் மழலையின்
விழிநீர் விலைமதிப்புதான் என்னவோ
பெற்றவளே கைவிட்டுச் சென்றபின்
மற்றவர்கள் மட்டும் என்ன செய்யப்போகிறர்கள்?
உலக மேடையில் மனிதாபினம்
மடிந்து வீழ்ந்ததென்று
அழுகின்றாயா அல்லது
வீசப்பட்டது என்னை மட்டுமல்ல
தாய்மையின் புனிதத்தையும் தான் என்று
விழிநீரில் மடல் எழுதுகின்றாயா?
எதற்காக இந்த அழுகுரல் ??
அழ வேண்டியது நீயல்ல.
தாய்மையின் புனிதம் உணராத
உதிரம் கொடுத்த உன் அன்னையும்
உத்தரவாதமில்லாத உலகமும்தான்.