கவிதை - சுமை தாங்காமல்......! - ரவை
சுமைதாங்க முடியாமல்
தரும், மழையை, மேகம்!
சுமையதிகமாகி கண்ணீரை
கண்மூலம் தரும், இதயம்!
தான் அறிந்ததை பிறருக்கு
தெரிவிக்க துடிக்கும், அறிவு!
வான்மதியும் கதிரவனும்
விரட்டியடிக்கிறது, இருளை!
குதலைமொழி குழந்தைக்கு
கொடுப்பாள், பால், தாயவளும்!
உதவாக்கறை என்றாலும்
நிழல்தருமே, ஆலமரம்!
உயிரிழந்தோர் உடலும்
உயிர்தருமே சிலருக்கு!
வீசியெறிந்த வைக்கோலும்
பசியாற்றும் பசுவுக்கு!
படைப்பில் உயர்ந்தும்நாம்
கவைக்குதவா பிண்டங்கள்!
உடைத்தெறிவோம் இந்நிலையை
உதவிடுவோம், பண்டங்கள்!