கவிதை - அகழ்வாரை தாங்கும் நிலம்! - ரவை
தன்னை குழிபறித்து
தோண்டுபவன்தாகம்
தணித்திடவே தண்ணீர்
தருகின்றாள் பூமாதா!
தன்னை மண்ணுக்குள்
புதைக்கும் மாந்தர்க்கே
விண்ணளவு வளர்ந்து
கனிதருவாள்விதைமாதா!
தனதுடலின் உறுப்புகளை
துண்டிப்பவன் இளைப்பாற
இனியநிழல் ஈந்திடுவாள்
இரக்கமுள்ள நெடியமரம்!
கருவாய்தன் வயிற்றில்
காலால் உதைத்தவனை
உருவாய் பிறந்தவுடன்
ஊட்டுவாள்பாலை, அன்னை!
போதையிலே, உதைக்கின்ற
புருஷனின்பசி போக்க,
பேதையுள்ளம் தவித்தே
பரிந்தூட்டும் பத்தினி!
கரிக்கும் உப்புநீரென்று
காரித்துப்புவோரை
பெரிய கப்பல்தாங்கி
பண்புடன் நடத்தும்ஆழி!
இன்னா செய்தார் ஒறுத்தல்
நன்னயம் செய்துவிடல்
தென்னைக்கும் கடலுக்கும்
தெரிந்திருக்கு, தெளிவாய்!
ஆறு அறிவுடையவர்க்கோ
அது ஏனோ தெரியவில்லை!
பேருக்குத்தான் பகுத்தறிவோ!
புரியும்நாள் எந்நாளோ?