கவிதை - இறைவா! உனக்கேன்....? - ரவை
ஆள்பவன் என்பதால்
ஆண்டவா என்கிறோம்!
தயவு காட்டுவதால்
தெய்வமே என்கிறோம்!
இசைபோல் இனிப்பதால்
ஈசுவரா என்கிறோம்!
எளியவரை காப்பதால்
இறைவா என்கிறோம்!
பிறந்தவர் வாழ்ந்திட
புவனமே தந்தாய்!
பறவைகள் மகிழ்ந்திட
பழங்களை தந்தாய்!
குருவியும் உறங்கிட
கூடுகள் தந்தாய்!
உறவுகள் நிலைத்திட
உணர்வுகள் தந்தாய்!
பசித்தவர் புசித்திட
பயிர்களை நட்டாய்!
புசித்தவர் உறங்கிட
படுக்கையும் ஈந்தாய்!
வசிப்பவர் உடுத்திட
ஆடைகள் குவித்தாய்!
ரசிப்பவர் மகிழ்ந்திட
கலைகளை தந்தாய்!
எனக்கொரு வருத்தம்!
இரங்கி பதில் தருவாய்!
உனக்கென ஏனோ
ஒன்றுமே இல்லை!
உண்பதுமில்லை, இரவில்
உறங்குவதில்லை, கண்டிட
கண்களுமில்லை, ருசிக்க
குடிக்க வாய்வயிறில்லை!
நினைத்து நினைத்து
நலிந்திடும் நெஞ்சம்!
அனைத்து உயிர்களும்
அழுகிறது நித்தம்!
எனக்கொரு பதில் தர
உடனே இறங்கிவா!
"உனக்குள்ளே உள்ளேன்,
வருத்தமேன் மனிதா!"