கவிதை - கொரோனாவே வா! - ரவை
வாழும் இடம் குடிசை!
உடன்பிறப்போ வறுமை!
கூழும் சோறும் பசியை
துடைத்துவிடும், உண்மை!
உலகனைத்தும் அஞ்சும்
உயிர்பறிக்கும் நோயும்
எம்மை கண்ட நொடியில்
தலைதெறிக்க ஓடும்!
அரசு உணவு தருவதாக
யாரோ சொல்லக் கேட்டு
தேடி ஓடிப் போனேன்,
தடியடிதான் தந்தார்!
ஊரடங்கு சட்டம்
அமுலில் உள்ளபோது
வெளியில் வந்த நாயே!
என்று வசையும் தந்தார்!
கூலிவேலை போச்சு!
காசு வரவும் போச்சு!
தேடி வந்து எமக்கு
சோறு தருவதாரு?
புதிய நோயே! எம்மை
பாய்ந்துவந்து தாக்கு!
எம்மை கொண்டு சென்று
சோறு தருவார், அரசு!
வேறுவழிகள் ஏதும்
எமக்கு தெரியவில்லை!
வறுமைக் கோட்டுக்கீழே
வாழ்வதாலே தொல்லை!