கவிதை - எங்கள் நிலை! - ரவை
"வேலைக்கு வராதே!
வீட்டுக்குள் நுழையாதே!
நாளொன்று இரண்டல்ல,
நானே சொல்லும்வரை!
வேலைசெய்யா நாளுக்கு
யார்தருவார் காசும்தான்?"
வேலா! முருகா! வாய்திறந்து
வழிசொல்லு, நான்வாழ!
வீட்டுவேலை செய்வோரும்
வயிற்றுப்பசியாற
காட்டுவாய் வழியொன்று!
கந்தா! கதிர்வேலா!
கட்டினபுருஷன் செய்யும்
கூலிவேலை நின்றதனால்
சட்டியில் சோறில்லை,
செத்திடவும் மனமில்லை!
கொரோனா பாதிப்பால்
கஷ்டப்படும் மக்கட்தொகை
ஓராயிரம் பேரல்ல;
ஒருநூறு கோடிசனம்!
வாராதுவந்த வியாதியினால்
வியாபாரம் முடங்கிடுச்சி!
பாரெங்கும் பறந்துவந்த
பிளேன்களும் தரைமீது!
ரயில், பஸ், மோட்டார்கார்
எதுவும் இயங்கவில்லை!
பயத்தில் பாமரன்கள்
பசிமறந்து உறங்குகிறார்!
துயரத்தில் வீட்டுக்குள்
குடும்பத்துடன் ஒளிகின்றார்!
மயானத்தில், செத்தபொணம்
மலைமலையாய் குவிகிறது!
போதாதோ, பெருமானே!
படமுடியாதினி துயரம்!
மீதமென்ன விட்டுவைத்தாய்?
மக்களெமை கொல்வதற்கு!
பூதம், பிசாசாய் படுத்துகிற
பெருநோயை போக்கியெமை
மீதிநாள் வாழவிடு!
மரணபயம் போக்கிவிடு!