கவிதை - கல்யாணமாம் கல்யாணம் - குணா
முன்பெல்லாம்
திருமணம் ஒரு திருவிழா ..
இன்றோ
பல திருமணங்கள் தெருவிலா?
நம் மரபின் மரபணுக்களில்
மறக்கமுடியா சடங்கு ...
இன்று
நாம் மறதியில் கடந்து செல்லும்
சங்கூதப்பட்ட சம்பர்தாயம் ..
வாரம் விடுமுறை என்ற
வரம் வாங்கி தந்த விவாஹம் ..!
இன்று
வார இறுதியிலே விவாஹம்
என நடக்குது விவாதம் ...!!
மூத்தோர் முன்னின்று
முக்கடலாய் கூடி
முறைப்படி முஹூர்த்தம் ..
யாரென்று தெரியாமல்
காவலுக்கு ஆள் சேர்த்து
முகவரியறியா முகவர்கள்
புகைப்படத்தில் மட்டும் முகம் பதிந்தவர்கள்..
அழைப்பிதழ்கள் எல்லாம்
அழைக்கப்படாத விருந்தாளிகள் ..
சொந்தங்கள் எல்லாம்
பந்திக்கு மட்டுமே முந்துங்கள் ...
மலர் மாலைகளும்
காகிதப் பூ மாலையாய்
மடிந்து மறையுது ..
பந்தலில் கட்டிய
வாழை மரம்
எனக்கென்னானு பாக்குது ...
வட்டிக்கு வாங்கியவன் போல்
வந்தவனும் நூறு சேர்த்து
மொய் வச்சு மொத ஆளா கிளம்பிடுறான் ..
யாருனு தெரியாம
எதுக்குன்னு புரியாம
மேடையில சோடி
தொலைந்த ஜாடி ?
காலத்தின் கணக்குகளில்
கலையிழந்த சித்திரமாய் ...
இன்னும் எத்தனை
சடங்குகள் சடலமாகுமோ ???