கவிதை - கற்பனையில் வரைந்த முகம் - குணா
கற்பனையில் வரைந்த முகம்
நித்திரையில் நிறைந்த முகம்
என் பேறுகால போர்வாள்
என்னுள்ளே இன்னொருயிர்
என்னுள்ளே இன்னொரு நான்
பழைய பூமியின் புதிய ஜனனம்
தினம் தினம் ஏங்கினேன்...
காத்திருந்த தேவ நொடி
கொடிய நொடியானதே...
கண்ட கனவெல்லாம் கண்ணுக்குள்ளே கருகுதே..
துடிக்கும் என் இதயம் துடிதுடிக்குதே...
நெஞ்சம் அனலடிக்குதே..
அஸ்திவாரமே அஸ்தியானதே..
பாம்பிஞ்சுக்கு பாம்பு நஞ்சா? ஐயகோ கடவுளே?!
என் கதறல் கேட்கிறாயோ?
நீயும் உறங்க சென்றிட்டாயோ?
என் வேதனை யாரறிவார் ?
எவ் வேதமும் துளியறியா...
இரக்கமற்ற இறைவனே
கண் திறந்து பார்க்கையில்
கண் மூடியது என் பூங்குயில்..
அவ்வுருவம் என்னுயிரிலே ..
என் உருவம் அது அறியுமா ?
இத்துயரம் இனி யார்க்கும்
இப்பூமியில் வரவேண்டா?
அத்துயரம் திரும்பி வரின்
கடவுளே நீ வேண்டாம் ...