கவிதை - மேகத்தலைவியே - ஜெப மலர்
பஞ்சு துகள்களால் ஆன மெல்லிய
பட்டு வஸ்திரம் தரித்த மேகத்தலைவியே...
கம்பீர நெஞ்சுடைய மென்மையான மனது கொண்ட
காண்போர் அணைத்துக்கொள்ளத் துடிக்கும் தலைமகன்
கடல் கடந்து நெடுந்தொலைவு சென்று
கஷ்டம் தீர்க்க பொருள் ஈட்டி
வெகுசீக்கிரத்தில் தங்களை வந்தடவேனென்று
வாக்கு கொடுத்து விடை பெற்றவன்
உன்னை காண விண்லோகம் வந்து
உன் மடியில் தலைசாய்த்து
உனக்குள்ளே தொலைந்து போனானே...
பூமித்தாயவள் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டு
வீரமகன் நீரைப்பொழிவான் என எதிர்பார்த்து
உடல் நீரின்றி பிளவுபட
உணவின்றி வலுவிழந்து
உருக்குழைந்து காத்திருக்கிறாள்
மழை மகனின் வருகைக்காக...
எழில் மிகுந்த மேகத்தலைவியே
உன் அன்பிற்குள் சிறைப்பட்டிருக்கும்
மழைத்தலைவனை விடுவித்து
அவன் தாய் மனதை குளிரச்செய்திடு...