(Reading time: 2 - 4 minutes)

காதலர் தின சிறப்பு கவிதை - காதலர் தின வாழ்த்துக்கள் - ஜெப மலர்

கூன் விழுந்து குறுகி போய்

கண் பார்வை பூத்து போய் 

நாடி நரம்புகள் வலுவிழந்து 

நடக்க பெலனற்று தள்ளாடினாலும்

கரம் கோர்த்த துணையின் அருகில் 

கஷ்டம் நஷ்டம் மறந்து 

பொக்கை வாய் காட்டி சிரிக்கும்

மதிப்பு மிக்க பெரியோருக்கும்.... 

 

துணையின் துணை இழந்து 

துன்பத்தால் தொய்ந்து

பணம் பொருள் இருந்தாலும் 

பாசமிகு துணையின் நேசமில்லாமல்

நிராதரவாய் நின்றாலும் 

நீங்கா நினைவாயிருக்கும் துணையின் நினைவில் 

துயரம் மறந்து சிரிக்கும் மதிப்புமிக்கோருக்கும்... 

 

பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தாலும் 

பாசத்தோடும் அக்கறையோடும் துணைக்கு 

திகட்டா அன்பை பொழிந்து

மாசில்லாத மெய் காதலோடு 

மனதில் சிங்காசனமிட்டிருக்கும்

உயிரோடு கலந்த தன் துணையை

உலகமாக நினைத்து வாழும் உங்களுக்கும்... 

 

துணையின் கரம் கோர்க்க

துடிப்போடு காத்திருக்கும் 

இளஞ்சிட்டு பறவைகளே... 

இல்லறத்தில் இணையும் நாள் முதல்

இணையில்லா ஜோடியாக வாழ்ந்திடுவோம் என

மாறாத பிரமாணமாய் மனதில் தீர்மானித்து 

மணவாழ்க்கையில் நுழைந்திட காத்திருக்கும் பிரியமானோர்க்கும்... 

 

தூய்மையான களங்கமில்லா அன்பை

துணை என்று எண்ணி பொழிந்தும்

பாதையறியா நடுக்காட்டில் 

பார்வை தரும் விழியை பிடுங்கி கொண்டு 

கயவர்களோடு கயவராய் சென்றவர்களால்

காயப்பட்டு காத்திருக்கும் நெஞ்சங்களுக்கும்.... 

 

பறக்க கற்ற சின்னஞ்சிட்டாய்

சிறகடித்து காதல் வானில் பறக்கும் 

சின்னஞ்சிறு சிறார்களே

மெய் காதல் ஒன்றே

மலரும் பூ போல அழகானதென்று உணர்ந்து 

மாசில்லாத அன்பை அள்ளி வழங்கி 

மணநாள் காணும் வரை

மங்கா ஒளியாக பிரகாசித்திட விழையும் 

இளம் உள்ளங்களுக்கும்... 

 

               மாசில்லா காதலோடு வாழும் 

               மானிடர் ஒவ்வொருவருக்கும் 

               காதலர் தின வாழ்த்துக்கள்!!!!!  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.