கவிதை - மீண்டும் ஒரு ஆசை - ஜெப மலர்
மாட்டு வண்டியில் காளை பூட்டும்
மரத்துண்டில் ஏறி அமர்ந்து
மேலும் கீழும் சென்று வர
எதிர் பக்கம் இருந்தவன்
எதிர்பாராமல் குதித்து விட
தொப்பென்று கீழே விழ
முன்நெற்றி புடைத்து கொள்ள
அம்மாவின் அடிக்கு பயந்து
அடுப்படி சுவற்றில் பதுங்கியதை
நினைக்கையிலே ஓர் ஆனந்தம்
நெஞ்சை அடைக்குதே...
மழை சாரல் மண்ணை தொட
மனம்கவர்ந்த தோழமையின் கரம் கோர்த்து
புத்தகப்பை கொண்டு தலை மறைத்து
துள்ளி குதித்து நீரில் ஆடிய நாட்கள்
திரும்ப கிடைக்குமா என்ற ஏக்கம்
மீண்டும் ஒரு முறை வந்து செல்கிறதே....
கை பிடியை இறுக்கி
கண் பார்வையை சுழற்றி
கவனமாக அழைத்து செல்லும் தாயோடும்
கை பிடியை தளர விட்டு
கவனத்தை தூண்டி விட்டு
துணிச்சலாக நடை போட்டு
துவளாமல் எழுந்து நிற்க உதவிய தந்தையோடும்
சுற்றி திரிந்த தருணங்கள் மீண்டும்
சுற்றி வராதா என மனம் ஏங்குதே....