கவிதை - என் தந்தை - ப்ரியசகி
நான் இம்மண்ணில் உதித்த வேளையையே தானும்
தானும் புதிதாய் பிறந்ததாக எண்ணி மகிழ்பவர்
என் வதனத்தில் புன்னகையைக் காண்பதற்காகவே
தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்
ஒவ்வொரு முறை கீழே விழும் பொழுதும் எனை பூப்போல்
தாங்கி வாழ்க்கையின் மேடு பள்ளங்களை உணர்த்தியவர்
கல்லுக்குள் சிற்பம் போல் என்னுள் இருந்த
தன்னம்பிக்கை தைரியத்தை வெளிக்கொணர்ந்தவர்
என் வாழ்க்கை எனும் வானவில்லின்
எட்டாவது வண்ணமும் அவரே...
எந்தத் தந்தையின் அன்பையும் என்றும்
வார்த்தைகளால் விவரித்திட முடியாது....
அவரின் செல்ல இளவரசியாகவே என்றும் அவர்
கைப்பற்றி இவ்வாழ்வை கடக்க விரும்புகிறேன்
காலன் வந்து என் கைகளைப் பற்றும் வரை.....