கவிதை - தயிர் பானை - ப்ரியசகி
ஒரே கல்லில் பானை உயிர் நீத்து தன் உயிரான
தயிரை தரையில் தவர விட்டு விட்டது...
நண்பகல் தனலில் வழியும் வியர்வைத் துளிகளோடு
நொறுங்கிய அப்பானையை வாழ்வாதாரமாகக் கொண்டவள்...
தூரத்தில் சிரிப்பொலியோடு சிறுவர் கூட்டம்..
வெற்று சிரிப்பை உதிர்த்துவிட்டு நகர்கிறாள்...
சிறுவர்களுக்கோ ஒரே கல் ஒரே பானை..
அதற்கான விலையோ அவளுக்கு ஒரு நாள் முதலீடு,
ஒரு நாள் உணவு, ஒரு நாள் உழைப்பு
அத்துடன் ஒரு நாள் வாழ்க்கை...