கவிதை - மாற்றம் தேவையா? - ப்ரியசகி
உணவளித்த விளைநிலங்களும் இன்று
வானளாவிய கட்டிடங்களாய்...
ஓடியாடிய பொட்டல் காடுகளும் இன்று
அளந்து பிரிக்கப்பட்ட மனைகளாய்...
கரை உடைத்து வெள்ளமாய் ஓடிய
வாய்க்கால் வரப்புகளும் இன்று
வறண்ட பாலைவனமாய்...
நிலாச்சோறு உண்டு, அருமையான கதைகள்
கேட்டு இன்பமாய் பொழுது கழித்த வீட்டின்
முற்றங்களும் தகர்க்கப்பட்டு இன்று
விரிவுபடுத்தப்பட்ட சாலைகளாய்...
வழியெங்கும் நெருக்கமாய் நிழற்கொடை
அளித்த மரங்கள் இரக்கமில்லாமல் வெட்டப்பட்டு
இன்று அனல் கூடத் தாங்காத நிழற்குடைகளாய்...
மனிதர்களோடும் இயற்கையோடும் ஒத்து
வாழாமல், மாற்றம் எனும் வேலிகளுக்கு அப்பால்
நின்று இயந்திரங்களோடு வாழப் பழகி விட்டோம்...
மாற்றம் என்பது நன்மையைத் தர வேண்டும்
இன்பமாய் இருந்த நன்மைகளை வேரறுத்த
இந்த மாற்றம் தேவையா?