கவிதை - தாயுமானாள்... - ப்ரியசகி
சிறு பயணமாயினும் பாதுகாப்பாக
இருக்குமாறு ஆயிரம் முறை
அறிவுறுத்துகையில் மெய் சிலிர்க்கும்
அன்பைக் காண்கிறேன்...
விரல் நீட்டி என்னுடன் விவாதம்
செய்கையில் தாயின்
கண்டிப்பைக் காண்கிறேன்...
உன் பிஞ்சு விரல்கள் உணவளிக்க
எனை நோக்கி நீளும் பொழுது
உலகை வென்ற பாசத்தைக் காண்கிறேன்...
மனம் துவண்டு மடி சாய்கையில்
இன்னதென்று அறியாமலேயே
தலை கோதி, மீண்டும் தாய் மடி
உணர்த்திய நெஞ்சம் நெகிழும்
நேசத்தைக் காண்கிறேன்...
அன்று இந்த கைகளில் தங்கை எனும்
கங்கையாய் தவழ்ந்தவள் இன்று
எனக்குத் தாயுமானாள்...