கவிதை - பள்ளிப்பருவ நட்பு - ப்ரியசகி
சுவர்களல்லாத மரத்தடுப்புகளால் வகுப்புகள்
பிரிக்கப்பட்டிருக்க, மழையிலும் வெயிலிலும்
அதிகம் பாதிக்கப்படும் கூரைகளுக்குக் கீழே,
மண் தரையில் சக தோழமையோடு நெருங்கி
அமர்ந்து பாடம் கற்ற வேளையிலும்,
மனதில் பதியாத ஆங்கிலத்திற்காக ஆசிரியரிடம்
ஒருவர் பின் ஒருவராக நின்று பிரம்பால்
பரிசு வாங்கிய பொழுதிலும்,
ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொண்டு
அனைத்து தின்பண்டங்களுக்கும் விலை கேட்ட
பின், அந்த ரூபாய்க்கான இனிப்பை வாங்கி
தோழமையோடு பகிர்ந்துண்ட போதிலும்,
பள்ளியின் நடுவில் வானுயர்ந்த மரங்களுக்கு
நடுவே ஓடியாடி, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து
இரத்தம் வர சிராய்த்துக் கொண்ட போதிலும்,
முந்தைய நாள் சண்டையிட்டு அடுத்த நாளே
பிரிவுத் துயரம் தாங்கிக் கொள்ளாது
உடனே வந்து பேசிடும் தோழமைக்காகக்
காத்திருக்கும் போதிலும் இல்லாத வெறுமை
இன்று வானுயர்ந்த கட்டிடத்தில் முற்றிலும்
குளிரூட்டப்பட்ட அறையில், சாய்வு நாற்காலியில்
அமர்ந்து, கணினியோடு உரையாட துவங்கியதும்
கையில் ஆயிரமாயிரம் வண்ணக் காகிதங்கள்
புரண்டு கொண்டிருக்கும் போதும், சட்டென
இவ்வெறுமையும் எதையோ தொலைத்த உணர்வும்
வந்து ஒட்டிக்கொள்வதும் ஏனோ?
மனம் அந்தக் கள்ளம் கபடமற்ற தோழமையை
எண்ணி ஏங்கும் ஏக்கம் என்றேனும் மாறுமா?