கவிதை - வனம் - இரா.இராம்கி
ஒப்பில்லா ஒரு வீடு,
ஒரு கோடி உயிரினங்கள்
ஓய்யாரமாய் வாழ;
வெயிலும் மழையும்
உன்னில் கலந்து,
மரங்கள் யாவும் அடர்ந்து வளர்ந்து,
அது காண்பதற்கு ஒரு அற்புதக்காட்சி;
நீயே அழகின் சாட்சி ;
ஓங்கி உயர நிற்கும் மரங்களை காண்பேனா?
என் பாதம் படரும் கொடியைக் காண்பேனா?மணம் வீசும் வண்ண வண்ண மலரைக் காண்பேனா?இன்னிசை பாடும் பறவையினம் காண்பேனா?
ஓசை எழுப்பும் விலங்கினம் காண விழைவேனா?இல்லை
கண்டு மிரள்வேனா?
உன்னிடம் ,கொஞ்சி பேசும் கிளியுமுண்டு;
கொன்று தின்னும் சிங்கம் புலியுமுண்டு;
இரத்தத்தை சுத்தம் செய்யும் மூலிகையும் பழங்களும் உண்டு;
இரத்தத்தை உறிஞ்சும்
அட்டையும் வவ்வாலும் உண்டு;
நித்தம் தாகம் தீர்க்கும் நீரோடையைக் கண்டே நனைவேனா?
மொத்தம் உடல் நனைக்கும் வெள்ளியருவியில் விளையாடி மகிழ்வேனா?
எத்தனை விலங்குகள் ,
எத்தனை பறவைகள்
எத்தனை தாவரங்கள்
எத்தனை பூச்சிகள்
அத்தனை உணர்ச்சிகள்
அத்தனை புணர்ச்சிகள்
அத்தனை உணவு சுழற்சிகள்;
அவை ஒவ்வொன்றும் காண காண, கண்கவர் வித்தியாச காட்சிகள்;
நீ மழைக்கு நன்றி சொல்ல, மழை மறுபடி உனக்கே நன்றி சொல்ல, அது ஓர் எழில்மிகு தொடர் இயற்கை திருவிளையாடல்.
உன்னை கட்டி அணைத்த மழையை, கட்டிப்போட்டது யார்? இறைவனா? இயற்கையா? இல்லை,
இரக்கமற்ற மானுடமே
தன்னலம் பேண, உன் வளம் கொன்று, மறுபடி
உன்னலம் பேண ஊரெல்லாம் பதாகைகள் பதித்தும், மனம் மாறா மானுடமே;
மழையை கொடையாய் தந்தனை, நீ; கோடையையே உன் கொடையாய் தரச் செய்தனை மனிதன்;
எங்களை சீற்றமுடன் வேட்டையாட வந்தாயோ நீயே?
ஊர் புகுந்து தாக்கும் வனவிலங்குகள், என்ன உன் தரைவழிதாக்குதலா?
வெப்பம் கொண்டு வாட்டும் உனது செயல் என்ன,ஒரு வான்வழிதாக்குதலா?
நீ உமிழும் வெப்பத்தீயில் சாகும் முன், மனிதன் விழிக்கட்டும்
மனிதம் மலரட்டும்
மரங்கள் செழிக்கட்டும்
மழைகள் பொழியட்டும்
உன் வளங்கள் பெருகெட்டும்
பசுமை பரவட்டும்
பூவுலகம் உய்யட்டும்