கவிதை - வாகன நெரிசல் - இரா.இராம்கி
தூங்கா மாநகரங்கள்;
துளியும் ஓய்வில்லா சாலைகள்;
துணிந்தே வாகனம் ஓட்டத் துவங்கும் புதுமுக ஓட்டுநர்கள்;
சாலையின் இரு மருங்கிலும் கூட்டமாய் கூட்டமாய் வாகனங்கள்;
புற்றீசல் போல் புறப்படும் இரு சக்கர வாகனங்கள்;
முந்த முடியாமல் உந்தியே செல்லும் சின்ன சரக்குந்துகள்;
முனைப்புடன் அநாயசமாக முந்திச்செல்லும் மூன்று சக்கர வாகனங்கள்
நத்தையாய் நகரும் நான்கு சக்கர வாகனங்கள் ஏராளம் ;
தவழ்ந்தே செல்லும் சொகுசு மகிழுந்துகள்;
வலமும் இடமும் வளைந்து லாவகமாக செல்லும் மாநகர பேருந்துகள்;
சற்றே கட்டுப்பாட்டுடன் செல்லும் பள்ளி வாகனங்கள்;
உயிருக்கு உத்தரவாதமில்லா சாலையில் உயிரின் வேரைத் தாங்கி வேகத்தோடும் விவேகத்தோடும் செல்லும் 108 ஆம்புலன்ஸ் வேன்கள்;
இத்துணை வாகனங்களையும்
பாங்குற நெறிப்படுத்தி, அத்துணை மாசுகளையும் மறுக்க வழியில்லாமல் சுவாசிக்கும் போக்குவரத்துக் காவலர்கள்
ஓர் சின்ன சிகப்பு துணியில் தன் உயிரின் உத்தரவாதத்தை வைத்து துணிவுடனே பணிபுரியும் சாலைப்பணியாளர்கள்;
கட்டுக்கடங்கா குதிரைகளாம்-வாகனங்களுக்கு
இரண்டு நிமிட கால்கட்டு போட்ட சிகப்பு நிற விளக்குகள்;
பந்தயத்திற்கு ஆயத்தமாய் நிற்கும் வீரர்களாய் செய்த மஞ்சள் நிற விளக்குகள்;
வாடிவாசல் திறந்த காளைகளாய் ஆர்ப்பரித்து ஒட வைத்த -பச்சை விளக்குகள்;
ஒர் வாகனத்தின் மரணத்திற்கு
முன்பு ,
ஒர் லட்சம் வாகனங்களின் ஜனனங்கள்;
ஓர் சாலையின் ஜனனத்திற்கு முன்பு ஓர் கோடி வாகனங்களின் ஜனனங்கள்;
ஏ சாலையே! நீ என்ன புகை கக்கும் பூக்களால் செய்த மாலையா;
வாகனங்கள் என்னும் அலை கொண்ட கடலா; ஆம்
வாகனநெரிசலே, நீ நிச்சயம் ஓர் கடலலை; நீ ஓய்வதாய் தெரிவதில்லை உன்னால் சாலைக்கு ஓய்வு என்பதே இல்லை-