இருக்கையில் அமர்ந்து ஏதோ கோப்புகளை சரிபார்த்துக்கொண்டிருந்த நந்தன் மருத்துவமனையின் உரிமையாளனும், தலைமை மருத்துவனுமான மீராநந்தன் வந்திருப்பவர் யார் என்பதை காண விழியுயர்த்த அங்கு கண்களில் கண்ணீர் திரள நின்றிருந்தவளை கண்டு மனம் பதைபதைக்க சட்டென எழுந்து நின்றான்.
"என்ன ஆச்சு கிருஷ்ணா? உடம்புக்கு ஏதும் சரியில்லையா? எப்போ வந்த? இங்க யார பாக்க வந்த?" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டபடியே அருகில் வந்தவனை "மீரா" என்ற கேவலுடன் அணைத்துக்கொண்டாள் கிருஷ்ணப்ரியா... வானதியின் நிலையை முழுவதும் கூறி பிரசவ அறைக்கு அவளையும் அனுமதிக்க வேண்டி உள்ளே வந்தவளுக்கு அங்கிருந்த மீராநந்தனை கண்டதும் தாயிடம் சேரும் மழலையாய்... அடக்கி வைத்திருந்த கண்ணீர் முழுவதும் கரைபுரண்டோட அவனுள் புதைந்துக்கொண்டாள்.
அவள் எதற்கு அழுகிறாள் என்பது புரியாமலிருப்பினும் நந்தனும் அவளது தலையை வருடி ஆறுதல் மொழிகளை பேசிக்கொண்டிருந்தான்.
(தருவாள்)