சமயலறையில் காலை உணவு தயாரித்துக்கொண்டிருந்த தமிழோ, அகல்யாவின் புன்னகை முகத்தை கண்டு "என்ன அத்தை உங்க சின்ன மருமகள் என்ன சொல்றாங்க??? முகமெல்லாம் பல்லா இருக்கு...." என்று கேட்க அவளது தலையில் செல்லமாய் தட்டிய அகல்யா, "நீ மொத மொத என்கிட்ட கேட்ட கேள்வியை தான் அவளும் கேட்டா அம்மான்னு கூப்டவானு..... அது தான் எனக்கு சிரிப்பு வந்துடுச்சு" என்று கூற இங்கே இருவரும் சேர்ந்தே சிரித்தனர்.
தங்களது அறையில் இனிக்குட்டி எழுந்துவிட அவளுடன் போராடிக்கொண்டிருந்தான் ஆதி. அவன் தூக்குவதற்காக கையை நீட்ட சட்டென ஓடி வந்து ஆதியின் மேலே ஏறிக்கொண்டாள். ஹாலில் அமர்ந்து செய்தித்தாள்களை படித்துக்கொண்டிருந்த தாத்தாவிடம் "குட் மார்னிங் தாத்தா" என்ற ஆதி, "தமிழ்" என்று குரல் கொடுக்க சமயலறையில் இருந்து எட்டிப்பார்த்தாள் முத்தமிழ்.
"இனி குட்டி எழுந்துட்டாங்களா??" என்றபடியே அவளை வாங்கிக்கொண்டு அவளை குளிக்க வைக்க சென்றுவிட்டாள். தன்னை தூய்மைப்படுத்திக்கொண்டு காபியை குடித்துவிட்டு அமர்ந்திருந்த பிரியா, "எவ்வளவு நேரம் இங்கவே இருக்குறது" என்று வெளியே வந்தாள். ஹாலில் இருந்த தாத்தாவும் ஆதியும் சிரத்தையாய் செய்தித்தாள்களை வாசித்துக்கொண்டிருக்க அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சமையலறை நோக்கி சென்றாள்.
அங்கு சுதாவுடன் கதைபேசியபடியே சமைத்துக்கொண்டிருந்தார் அகல்யா. சுதா அந்த வீட்டில் சமையல் வேலைக்கு வந்தவர். ஆனால் இதுவரை அவருக்கு சமையல் செய்யும் வாய்ப்பை தான் அகல்யா கொடுத்ததில்லை. வெங்காயம், காய் முதலியவற்றை நறுக்குவது, பாத்திரங்களை கழுவது போன்ற வேலைகளை தான் கொடுப்பார். "அம்மா...." என்று பிரியா அழைக்க பின்னால் திரும்பாமலே, "உன்னை அத்தைனு தான கூப்பிட சொன்னேன்" என்று மட்டும் குரல் கொடுத்தார்.
அந்த வீட்டில் புதிதாய் வந்திருந்த ப்ரியாவை பார்த்த சுதாவோ "யார் இவங்க???" என்று மெல்லிய குரலில் அகல்யாவிடம் கேட்க, அமைதியாக இருக்குமாறு கண்களாலே ஜாடை காட்டினார். "என்ன டா இது நாம ரூம்குள்ளவே இருந்து இருக்கலாம் போலவே" என்று யோசிக்க வேறு செய்தாள் பிரியா. அவள் அமைதியாக இருப்பதை உணர்ந்து அகல்யா திரும்பிப்பார்க்க அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் ப்ரியா.
அவள் அருகில் சென்ற அகல்யா "என்ன வேணும் பிரியா???" என்று அவளது கையை பிடித்துக்கொண்டு கேட்க "ஒன்னும் இல்லை மா..... இல்ல இல்ல..... அத்தை உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்னு வந்தேன்" என்று தயங்கி தயங்கி பேச... அவளது தடுமாற்றத்தில் சிரிப்பு வர அதை முயன்று அடக்கியவர் "இது உன்னோட வீடு டா.... அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் உனக்கு" என்று பாசமாய் அவளது தலையை தடவிக்கொடுத்தார் அகல்யா.
அவரே தொடர்ந்து "இங்க வேலையை நாங்களே செஞ்சுடறோம்.... இந்தா நந்து தான் இன்னும் எழுந்து வர....ல அவனுக்கு மட்டும் இந்த காபியை குடுத்துட்டு வந்துடு டா" என்று அவள் கையில் ஒரு காபி கோப்பையை திணித்தார் அகல்யா. "அது..... நா.... வந்து...." என்று பிரியா எதுவோ கூற வர அதை கேட்காதவர் போல "சீக்கிரம் போடா.... இல்லனா கத்துவான்" என்று பொய்யாய் ஒரு குற்றச்சாட்டை சுமத்தினார் அகல்யா.