எது அழகு…!! - ஸ்வேதா சந்திரசேகரன்
வகுப்பு முடிகிறதே என்று இருந்தது வித்யாவிற்கு. பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் அனுவோ ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்கிறேன் என்று தூங்கி வழிந்து கொண்டிருந்தாள்.
கல்லுரி முடிந்து விட்டது என்று கடைசி லாங் பெல்லும் அடித்து விட்டது. பதற்றமும் தொற்றிகொண்டது அவளிற்கு.
"அனு என் கூட வா அனு" கெஞ்சினாள் வித்யா
அனு," வித்யா.., அவங்க அப்படி தான் இருப்பாங்க நீ கண்டுக்காம நடந்து போ" என்று சமாதானம் செய்வதுப்போல் பேசிவிட்டு அனு அவள் புதிய நண்பனை சந்திக்க சென்று விட்டாள்.
மூன்று நாட்களாய் கூட போனாள் தான் அனு. வித்யாவிற்கு துணை என்று அவள் பஸ் ஸ்டாப் வரை சென்று விட்டு திரும்ப கான்டீன் சென்று நண்பனை பார்ப்பதற்கு நேரம் ஆகிவிடுகிறது. நட்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும் சுழல் உருவாகும் நேரம் வித்யாவுடன் வீணடிக்க அனு விரும்பவில்லை.
வித்யாவின் புலம்பல் ஆரம்பித்தது."ஐயோ, நம்ப ஊர் பக்கமே சேர்த்து விடுங்க என்று கேட்டேனே, இப்படி இங்க வந்து சேர்த்து விட்டுட்டாங்களே"
மனத்திரையில் "பாப்பா, சிட்டில படிடா, நல்ல எக்ஸ்போசர் கிடைக்கும்" என்று அவள் அண்ணன் சொன்ன வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருந்தது.
இப்படியே புலம்பலுமாகவும் யோசனையாகவும் வளாகத்தை விட்டு வெளியே வந்துவிட்டாள்.
"மச்சி, ஹோம்லி வருதுடா" என்று கும்பலில் ஒருவன் சொல்ல, எல்லாரும் திரும்பி "சுடிதார் அணிந்து வந்த சொர்கமே..." என்று பாட ஆரம்பித்து அவள் அணிந்திருந்த கொலுசிலிருந்து. மூன்றாக மடித்து இரண்டு பக்கமும் பின் குத்தி போர்த்திருந்த துப்பட்டா வரை கிண்டல் செய்தனர்.
அவள் திணறலுடன் வேகமாக நடக்க, வேண்டும் என்றே ஒருவன் "பாட்ரீ, பாடுரீ" என்று அவள் கட்டை குரலை கிண்டல் செய்தான்.
"எம்புட்டு கலையான மொகம் புள்ள ஒனக்கு" என்று அவள் ஆச்சி சொல்லுபோதெல்லாம் வளர்ந்த கர்வம் தளர்ந்து தவிடு பொடியானது அந்த பையன்களின் சீண்டலில்.
"ஹப்பா.., எப்படியோ அவனுங்க இடத்தை தாண்டி வந்துட்டோம்" என்று நெஞ்சில் கை வைத்து கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டாள்.
கண் திறந்தவளை மிரள வைத்தான் எதிர்க்கே வந்த ஒருவன், குனிந்து எதையோ அவளிடமிருந்து பறிப்பதுப்போல் பாவனை செய்து, அவள் "ஐயோ" என்று கத்த ஏதும் தெரியாதுப்போல் தலையை கோதிக் கொண்டு கடந்து விட்டான்.
வித்யாவிற்கு இதயம் வாய் வழியே துள்ளி வந்து விடுவதுப்போல் துடித்தது. நடந்தை பார்த்த கிண்டல் செய்த அந்த கும்பல் இன்னும் சத்தமாக சிரித்தது. வித்யாவிற்கு கண்ணீர் கண்களில் கோர்த்து நின்றது.
மெதுவாக தலையை குனிந்துகொண்டே நடந்து செல்பவளை பார்த்து,
ஒருவன் " என்னா முடி மச்சான் அந்த பொண்ணுக்கு" என்றான். "ரொம்ப அமைதிடா மச்சி" என்றான் இன்னொருவன்."டேய் பைனல் இயர்ல பார்க்கணும் மச்சி எப்படி மாறுராங்கனு" என்று எதிர்காலத்தை கணித்தான் இன்னொருவன். "சரி வா மச்சான் அடுத்த பிகர பார்போம்" என்று அடுத்ததிற்கு திசை திருப்பினான் இன்னொருவன்.
ஓய்ந்து போய் வந்து பஸ் ஸ்டாப் நாற்காலியில் அமர்ந்தவளிடம் அபூர்வா பேச்சு கொடுத்தாள் "இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது விது உனக்கு" என்றாள் குரலில் உற்சாகத்துடன்.
குரலில் உற்சாகமே இல்லாமல் வகுப்பில் நடந்ததெல்லாம் சொன்னாள். அக்கறையுடன் அபூர்வா " ஏன் குரல் இப்படி இருக்கு உனக்கு " என்று கேட்டாள்.
அழுகை தொண்டை அடைக்க " ஒன்னா நிறைய பணத்தோட பிறந்திருக்கணும், இல்லை அழகோட பிறந்திருக்கணும், குறைந்தது டவுன்னிலாவது பிறந்திருக்கணும், என்னை மாதிரி கட்டையான குரலோட, குக்கிராமத்தில் பிறந்து, எல்லாத்தையும் அதிசயமாக பார்க்குற ஜென்மத்தை எல்லாம் ஏன் தான் கடவுள் படைச்சானோ" என்றாள் துவண்டு தாழ்வு மனப்பான்மையோடு.
சூழலை மாற்ற "எனக்கு மொபைல் போன், லேப்டாப் இயக்க சொல்லி கொடுத்தாங்க இன்னைக்கு" என்று பூரிப்பாக சொன்னாள் அபூர்வா
வித்யாவிற்கும் மகிழ்ச்சி தொற்றிகொண்டது, தொழில்நுட்ப வளர்ச்சி அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
பின் மற்றவரை தன் நகைச்சுவை மிக்க பேச்சில் வீழ்த்தும் அபூர்வா பேச சிரித்துகொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை வித்யாவிற்கு.
அபூர்வா,"பஸ் வருது போல விது" என்று கைதடியுடன் எழுந்து நின்றாள்.
"அட ஆமாம் அபூ" என்று தான் கவனிக்காததையும் கவனித்தவளை ஆச்சர்யத்துடன் பார்த்து சொல்லிகொண்டே அவள் கைபிடித்து பேருந்தில் ஏற உதவி செய்தாள் வித்யா.
பேருந்தில் ஏறி அமர்ந்த பின் அபூர்வா அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடியை சரி செய்தப்படியே " நீ பார்க்க அழகா என்று எனக்கு தெரியாது, ஆனால் உன் மனசு ரொம்ப அழகானது என்று எனக்கு தெரியும், அதை நான் உணர்ந்திருக்கிறேன்" என்றாள்.
உடைந்து சிதறிய மனமும் தன் நம்பிக்கையும் ஒன்றாய் சேர்ந்து இறுகியது வித்யாவிற்கு அபூர்வாவின் வார்த்தையில்.
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.