சிரிக்கப் போகிறேன் பார் என்பது மாதிரியான குவிந்த உதடுகள். அவனைப் பார்த்ததும் மாராப்பை, சரி செய்தபடியே,‘அறியாத' பிள்ளை- யாண்டானிடம் பேச விரும்பாதவள் போல், அதே சமயம் அவன் பேசினால் பேசித் தொலைக்கத் தயாராக இருப்பது போல் நின்றாள். இளங்கோ கேட்டான் :
"ஒன்னோட... மன்னிக்கணும், உங்களோட இந்தப் பையன் காணாமல் போனவனா... இல்ல..."
"அப்போ நீ அந்த கஸ்மாலம் சாருக்கு, தூதா வந்திருக்கே, இல்லியா? வழிய விடுய்யா."
"எந்த கஸ்மாலம்?”
“அந்தத் தெருவிலே எல்லாமே கஸ்மாலம்தான். ஆனால் அந்த ரமணன் சாரு இருக்காரே, அவரு கஸ்மாலத்துலேயும் படே கஸ்மாலம். அந்தக் கதையே வாணாம்."
“எந்த கதைய?'
"உயிரோட இருக்கிற என் ராமுப் பயல கொஞ்ச நாளைக்கி மறைச்சுவச்சி, காணாமப் போனதா பழையபடியும் போலீஸ்ல சொல்லணுமுன்னு அந்த பெரிய கஸ்மாலம் சொல்லிச்சே, அந்தக் கதையத்தான். பெரிய மனுசனா அவன்? ஒரு பொண்ண வேற பெத்திருக்கான். உயிரோடிருக்கிற இந்தப் பயல, சரோசா என்கிறவ கொன்னாலும் கொன்னுருப்பான்னு போலீஸ்ல சொல்லணுமாம். எப்படி இருக்குது கத? இதுக்கு நீ ஜால்ராவா?"
"காணாமப் போன உன் பையன் கிடைச்சது எப்படி?"
"ஏன்யா, வருத்தப்பட்டுக் கேக்கிற? ஊட்ல என்னோட 'அது...' பாவி - சாராயத்த குடிச்சா ஒயுங்கா குடிக்கப்புடாது? பாதிய வச்சிட்டு, படுத்திட்டு. இந்தப் பயல் என்னாடான்னா, அது தேங்கா தண்ணின்னு குடிச்சிட்டானாம். சின்னப்பாதேவர் படத்துல ஒரு குட்டி யானை சாராயத்தைக் குடிச்சிட்டு அல்லார்க்கும் 'டேக்கா' கொடுக்குமே, அப்படி கொடுத்துட்டான். எப்படியோ பஸ் ஏறி தொரப்பாக்கத்துல கீற எங்க அண்ணாத்த வூட்டுக்குப் பூட்டான். என் அண்ணி என்னடான்னா, நானு, நாலு நாளைக்கி அவஸ்த படட்டுமுன்னு பயல அங்கேயே வச்சிட்டாள். போன வாரம்தான் உட்டாள். இந்தப் பயல காணலன்னு நான் பட்டபாடு,