Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 04 - மு. வரதராசனார்
சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, "எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா" என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்" என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, "கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும். சினிமா, ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. நான் பத்துப் பதினைந்து நாளுக்கு ஒருமுறை வருவேன், என்னிடம் சொல்லு" என்றார்.
சாமண்ணா அப்போது நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்போடு இருந்தார். மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தபடி இருந்தது. நெற்றியில் சந்தனப்பொட்டும் குங்குமமும் இருந்தன. காலையில் ஊரில் அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது. வெண்ணிறமான உடையும் மலர்ந்த விழியும் புன்முறுவலும் அவருடைய உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுவனபோல இருந்தன. சிறிது நேரம் தமக்கையாரோடு ஊர்ச்செய்திகளைப் பேசிக்கொண்டிருந்து மறுபடியும் என்னைப் பார்த்தார். "கண்ட பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டா. சந்திரனும் நீயும் வீட்டிலேயே திண்ணையிலேயே விளையாடுங்கள். இவ்வளவு இடம் போதாதா? இனிமேல் படிப்புத்தான் முக்கியம். விளையாட்டு எதற்கு? விளையாடினது போதும், வாத்தியார்கள் கொடுத்த பாடங்களைப் படியுங்கள், எழுதுங்கள், வேளைக்குச் சாப்பிடுங்கள்", என்று எனக்கும் அதே வீட்டில் சாப்பாடு முதலியன ஏற்பாடு செய்துவிட்டவர் போல் பேசினார். சந்திரன் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தான். நான் சாமண்ணா பக்கத்தில் உட்கார்ந்தவன் சிலைபோல் இருந்தேன். கையும் காலும் மடக்கிக் கொண்டு அவ்வாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தது துன்பமாக இருந்தது. சாமண்ணா அதையும் கவனித்தவர் போல், "டே! அப்பா! சந்திரா! நீ அரை வினாடி சும்மா இருக்கிறாயா? இங்கே போகிறாய், அங்கே போகிறாய், இதை எடுக்கிறாய். அதை வைக்கிறாய், அதோ பார், உன்னைப்போல் பிள்ளை எவ்வளவு அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். நீ இதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். தெரியுமா?" என்றார். என்