ஓரமாக நகர்ந்தேன். "பயப்படாதே; ஒன்றும் செய்யாது; பயந்தால் அதற்குச் சந்தேகம் ஏற்படும். நல்ல நாய். காவலுக்காக வளர்க்கிறோம். சும்மா இரு. அசையாதே" என்றான் சந்திரன். நாய் என்னை உற்றுப் பார்த்தது. அதனுடைய பார்வை கடுமையாக இருந்தது. பிறகு, என் எதிரிலேயே படுத்தது. பார்வை மட்டும் என் மேலேயே இருந்தது. "நீ நெருங்கிவா. அது உன்னை முகர்ந்து பார்த்துப் பழகி விட்டால்தான் நல்லது. அதுவரையில் உன்னை அந்நியன் என்றே பார்த்துக் கொண்டிருக்கும்" என்றான் சந்திரன். என் கையைப் பிடித்து இழுத்து அதனிடம் கொண்டு சென்றான். அது வாலைக் குழைத்தபடியே என்னை முகர்ந்து பார்த்துவிட்டுத் தலைவைத்துப் படுத்தது.
தெருப்பக்கம் போய் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். இருபது வயது உள்ளவள் ஒருத்தி சந்திரனைப் பார்த்து, "எப்போ மாமா வந்தே? எங்கள் பெரியம்மாவும் வந்திருக்கிறாங்களா?" என்றாள். அவளுடைய ஆடையும் தோற்றமும் பார்த்தால் வேலைக்காரிபோல் தோன்றினாள். "இப்பத்தான் வந்தேன். அத்தையும் வந்திருக்கிறார்" என்றான் சந்திரன்.
"யார் சந்திரா? உங்கள் சின்ன அத்தை மகளா?" என்றேன்.
"சின்ன அத்தையா? அப்படி யாரும் இல்லையே! இந்த அம்மா அதோ அந்த வீட்டு மருமகள்" என்று நாலைந்து வீட்டுக்கு அப்பால் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான்.
"உனக்கு உறவா?"
"உறவும் இல்லை, ஒன்றும் இல்லை."
"மாமா என்று அழைத்தாளே!"
"எங்கள் ஊரில் அப்படி முறையிட்டு அழைக்கும் வழக்கம் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் அப்படித்தான். மாமா, மச்சான், அத்தை, பெரியம்மா, அண்ணன், சிற்றப்பா என்று யாரும் ஒருவரை ஒருவர் முறையிட்டுத் தான் பேசுவார்கள், வேடிக்கையாகவும் பேசுவார்கள். இதில் சாதி வேறுபாடு ஒன்றுமே இல்லை."