நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.
அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், "எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு" என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.
ஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன. புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி