எழுந்து உட்கார்ந்தேன். கன்னத்தில் அறைந்து என்னை நோக்கியே சொன்ன சொற்கள் போல் இருந்தன.
இமாவதியின் திருமண அழைப்பு வந்த அன்று சந்திரன் பட்ட துயரம் நினைவுக்கு வந்தது. அன்று அவனுக்கு எவ்வளவு அறிவுரை சொன்ன நான், இன்று அவனைப் போலவே கலங்குகிறேனே என்று எண்ணிப் பார்த்தேன். எந்தத் துன்பமும் அவரவர்களுக்கு வந்து பட்டால்தான் தெரிகிறது. ஆனால், சந்திரன் முயற்சி செய்தான். கிட்டாததற்கு ஏங்கி அழிந்தான். நான் முயற்சியே செய்யவில்லை. கிட்டக்கூடியதற்கும் முயற்சி செய்யத் திறன் இல்லாமல் வாடுகின்றேன். சந்திரன் அளவு கடந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து அல்லலுற்றான். நான் அளவோடு எதிர்பார்ப்பதற்கும் தயங்கித் தோல்வியுறுகிறேன். நல்ல உலகம் இது! வாதம் குறைந்தால் பித்தம், பித்தம் இறைந்தால் சிலேத்துமம் என்று நோயாளிகள் துன்பப்படுவது போலவே உள்ளது! மன நோயிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் ஒவ்வொரு வகைத் துன்பம் ஏற்படுகிறதே! காதல் முயற்சியில் இறங்கினால் ஒரு வகை ஏமாற்றம்! இறங்காமலே இருந்தால் இன்னொரு வகை ஏமாற்றம்! ஆனால், சந்திரன் துடுப்புகளை எறிந்துவிட்டு மரக்கலத்தையும் உடைத்துவிட்டுக் கடலில் குதித்தான். நான் துடுப்புகளை ஏந்தியபடியே, மரக்கலத்தில் நின்றபடியே வீசும் புயலின் கொடுமையைப் பார்த்துக் கலங்கி நிற்கிறேன். இவ்வாறு பற்பல எண்ணிக்கொண்டிருந்து விடுதிக்குத் திரும்பினேன்.
அன்று இரவு நல்ல உறக்கமும் இல்லை. சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுவதா, இல்லையா, என்ன எழுதுவது, மாலனுக்காக விட்டுக்கொடுத்துக் கற்பகத்தை மறந்து விடுவதா, மாலனைப் பற்றிக் கவலைப்படாமல் கற்பகத்தைப் பெற முயற்சி செய்வதா, அப்படியானால் குருவிக்குஞ்சு இறக்கை வளர்வதற்கு முன்னமே கூட்டைவிட்டு வெளியே வந்த கதை ஆகுமோ என்று வேறு வகை எண்ணங்களில் சிக்குண்டு தடுமாறினேன்.
விடியற்காலையில் அயர்ந்து உறங்கிவிட்டேன். பொழுது விடிந்ததும் யாரோ எழுப்பும் குரல் கேட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தேன். மாலன் நின்றுகொண்டிருந்தான். "நேற்றெல்லாம் காணோம். இரவு நேரம் கழித்து வந்தாய்; முன்னேரத்திலேயே படிக்காமல் விளக்கணைத்துத் தூங்கி விட்டாய். என்ன காரணம்? உனக்கும் ஏதாவது காதல் நோய் முற்றிவிட்டதா, சந்திரனைப் போல-?" என்றான்.