இரவல் வாங்கிக்கொண்டு வருகிறேன்."
"வேண்டாம். இங்கேயே ஒரு லாந்தர் காமிரா அறையில் இருந்தது" என்று காமாட்சி அம்மாள் குரல் கேட்டது. "டேய் விசு! வந்து விளக்கை வாங்கிண்டு போடா."
"வேண்டாம், வேண்டாம். நான் வந்த வழியே திரும்பப் போகிறவன்தான். கல்யாணம், நீ இருந்து இவர்களைக் கிளப்பி விட்டு வந்து சேர்."
"அப்படிச் சொல்லாதீர்கள் சுவாமி. இந்தப் பையன் கொஞ்சம் துடுக்கு. இவன் தாயார் தகப்பனார் ரொம்ப நல்லவர்கள். இவனுக்கு அக்கா ஒருத்தி இருக்கிறாள். கல்யாணம் ஆக வேண்டிய பெண். அவளைப் பார்த்தால் உங்களுக்கே மனம் இளகிப் போகும்."
"எனக்கே மனம் இளகிப் போகும் என்றால் என்ன அர்த்தம்? நான் அவ்வளவு கல் நெஞ்சக்காரன் என்கிறாயா?"
"இல்லை இல்லை. எதைச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்கிறீர்களே?"
"தப்பும் எடுக்கலை. தாரையும் எடுக்கலை. இன்னும் அதற்குக் காலம் வரவில்லை."
இரண்டு பேரும் உள்ளே போனார்கள். "தாத்தா நல்ல சுபமான வார்த்தையாச் சொல்லிண்டு உள்ளே நுழையறார்" என்றான் விசு.
மாசிலாமணி முற்றத்தின் பக்கத்திலிருந்த பழைய சாய்வு நாற்காலியில் விச்ராந்தியாக விசிறிக் கொண்டு அமர்ந்திருந்தார். "வாருங்கள், வாருங்கள்" என்றார்.
"இது வேறேயா? என் வீட்டுக்குள்ளே நான் வருவதற்கு 'வாருங்கள் வாருங்கள்' என்று எனக்கே உபசாரமா?"