"வந்தவர்களை வாருங்கள் என்று அழைப்பது நம் நாட்டுப் பண்பாடு. அதனால்..."
"சொந்தக்காரர் அனுமதி இல்லாமல் பூட்டை உடைச்சு வீட்டுக்குள் நுழையறதும் நம் நாட்டுப் பண்பாடோ?"
கல்யாணம் இப்போது குறுக்கிட்டு, "இந்தவீட்டின் சொந்தக்காரர் ரங்கநாத முதலியார் என்று சொன்னேனே இவர்தான்... ரொம்ப நல்ல மனிதர் பரோபகாரி...." என்றான்.
"நிறுத்தப்பா உன் வர்ணனையை. நான் நல்லவனுமில்லை. பரோபகாரியு மில்லை! நல்லவர்களுக்கு நல்லவன்; பொல்லாதவர்களுக்குப் பொல்லாதவன்!"
"மன்னிக்கணும். சத்தியமா நாங்க பூட்டை உடைக்கலை. இந்தப் பயல் போய்ப் பூட்டைத் தொட்டான்..."
"நான் தொடக்கூட இல்லை. கிட்டப் போனேன். அது தானாகத் திறந்துகொண்டது" என்றான் விசு.
காமாட்சி அம்மாள் தூண் மறைவிலிருந்தபடியே பேசினாள்: "அஸ்தமிக்கிற வேளையிலே நாங்க இந்த ஊரிலே வந்து அகப்பட்டுக் கொண்டோம். கல்யாணம் ஆக வேண்டிய வயசிலே இந்தப் பெண் வேறே இருக்கிறாள். இவளையும் அழைத்துக்கொண்டு இனிமேல் இந்த இருட்டிலே நாங்கள் எங்கே போகிறது? அடி பெண்ணே, கமலா! மாமாவுக்கு நமஸ்காரம் பண்ணடி!"
"வேண்டாம்; வேண்டாம்! நமஸ்காரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்!" என்று சொல்லிவிட்டு ரங்கநாதன் கமலாவை பார்த்தார்.
பிறகு, கல்யாணத்தை நோக்கி, "என்னமோ வந்து விட்டார்கள். இரவு நேரத்தில்