(Reading time: 10 - 19 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

  

"வாஸ்தவம்தான், அக்கா! அவரை அடைய எனக்கு இந்த ஜன்மத்தில் கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவுதான். என் தலைவிதி வேறுவிதமாக இருந்திருந்தால் நான் நிர்மூடமாக இருந்த போதிலும் அவர் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருப்பார், இல்லையா?"

  

"விதி, உன் விஷயத்தில் என்ன நிர்ணயித்திருக்கிறதோ, யாருக்குத் தெரியும்? இப் போதுகூட என்ன குடிமுழுகிப் போய்விட்டது? உன் பெற்றோரிடம் வந்து உன்னை மேலே படிக்க வைக்குமாறு நான் வாதாடுகிறேன். கல்யாணத்தினிடமும் மறுபடியும் பேசிப் பார்க்கிறேன்."

  

"வீண் வேலை அக்கா. என் பெற்றோர் சம்மதிக்கப் போவதும் இல்லை; அவர் மனம் மாறப் போவதும் இல்லை. பேசாமல் அவரை மணக்க நீங்கள் சம்மதித்து விடுங்கள். அவர் மகிழ்ச்சியைக் கண்டாவது நான் ஆறுதல் பெறுகிறேன் !"

  

"அது சரி, அப்போது என் துயரத்தைக் கண்டு யார் வேதனைப்படுவது?" என்றாள் பவானி.

  

கமலா விரக்தியாகச் சிரித்தாள். பிறகு, "அக்கா! முதன் முதலாக நான் உங்களை ராமப்பட்டணம் வீதியில் சந்தித்தபோது என்ன நினைத்தேன், தெரியுமா?" என்று கேட்டாள்.

  

"என்ன எண்ணினாய்? அம்மாமி வயதாகி யும் இத்தனை அலங்காரமா என்று தானே?" என்றாள் பவானி புன்னகையுடன்.

  

"இல்லை, அக்கா. உங்கள் அழகையும் அலங்காரத்தையும் அப்புறம்தான் நான் கவனித்தேன். முதலில் என் நெஞ்சைக் கவர்ந்தது உங்களிடம் விகசித்த அறிவொளிதான்.

  

'என்னுடைய நிறைவேறாத ஆசைகள் அத்தனையையும் நிறைவேற்றிக் கொண்ட பெண்ணொருத்தி இதோ இருக்கிறாள்" என்று என் மனம் உடனே உணர்ந்தது. உங்களிடம் எனக்கு மதிப்பு மிகுந்தது. உயர்ந்த படிப்பு, நல்ல உத்தியோகம், பெரிய பெரிய வக்கீல்களுடன் துணிந்து மோதுகிற வாதத் திறன், அத்துடன் அழகு, யௌவனம், அலங்காரம் இதையெல்லாம் பார்த்தபோது எனக்குப் பொறாமையாகக் கூட இருந்தது!

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.