(Reading time: 13 - 26 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

உள்ள உருவ ஒற்றுமை பற்றிக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்தார்கள். 'பயங்கரக் குற்றவாளி அவன்; சீக்கிரம் கண்டுபிடியுங்கள்' என்று ஓர் அதட்டல் போட்டு அனுப்பி வைத்தேன். இன்று காலை அந்தக் கையாலாகாத பேர் வழிகள் மறுபடியும் என்னிடம் வந்தார்கள்."

  

"வந்து....?" - நெஞ்சத் துடிப்புடன், ஆனால் அமைதி இழந்ததாகக் காட்டிக் கொள்ளாமல் வினவினாள் பவானி.

  

"ஏலமலைக் காட்டில் அவன் ஒளிந்து திரிந்திருக்கிறான். இவர்களும் விடாமல் தேடியிருக்கிறார்கள். மலைச் சாரலில் உள்ள சின்னச் சின்ன கிராமங்களிலெல்லாம் விசாரித்திருக்கிறார்கள். கடைசியில் துப்பறிந்து ஒரு குடிசைக்குள் இருந்தவனைப் பிடிக்கப் போனபோது அவன் தப்பி ஓடியிருக்கிறான். ஒரு ஸி.ஐ.டி. அவனை நோக்கிக் கைத் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான்...."

  

ஏற்கனவே பவானிக்குத் தெரிந்த விஷயம்தான் என்றாலும் அவளுக்கு இப்போதும் தூக்கிவாரிப் போட்டது.

  

"பவானி! நீ உன் காதலனாகக் கருதி வந்த ஒருவனைப் பற்றி இப்படியெல்லாம் நான் பேச நேர்ந்ததற்காக எவ்வளவு வருத்தப்படுகிறேன், தெரியுமா? என் தம்பியைக் குறித்து மட்டமாகப் பேச வேண்டியிருக்கிறதே என்பதைவிட அதிகமாக உன் காதலனைப் பற்றிச் சொல்ல வேண்டியிருக்கிறதே என்பதால் நான் கலங்கி நிற்கிறேன். ஆனாலும் உண்மைகளை எத்தனை நாள் மறைக்க முடியும்? மனசைக் கல்லாக்கிக் கொண்டு கூற வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீயும் உள்ளத்தைத் திடப்படுத்திக் கொண்டு கேட்டுத்தான் ஆக வேண்டும்."

  

"சொல்லுங்கள்! அடிபட்ட புலி என்று ஆரம்பத்திலேயே நீங்கள் குறிப்பிட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என்று ஊகிக்கிறேன்" என்று நாத் தழுதழுக்கப் பேசினாள் பவானி. அவள் கண்களில் தளும்பி நின்ற நீரைக் கோவர்த்தனன் துடைக்க அனுமதியாமல் ஒருபுறம் திரும்பிப் புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

  

கோவர்த்தனன் ஏமாற்றம் அடைந்தவராக ஒரு பெருமூச்சுடன் திரும்ப வந்து தமது இருக்கையில் அமர்ந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.